எப்புட்றா.. எல்ஐசியின் தலைவரை விட அதிகம் சம்பாதிக்கும் ஏஜெண்ட் - சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
நாக்பூர்: எல்.ஐ.சியின் தலைவராக உள்ளவர்கூட இவ்வளவு சம்பாதிக்க முடியாது, ஆனால் ஒரு எல்ஐசி ஏஜெண்ட் 2467 கோடி ரூபாய்க்கு பாலிசிகளை விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். பல்வேறு நிதி சேவைகள் மூலம் அந்த எல்ஐசி ஏஜெண்ட் இப்போது 488 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பாரத் பரேக்க்கு 55 வயது ஆகிறது. இவர் எல்ஐசி நிறுவனத்தின் 13.6 லட்சம் முகவர்களில் ஒருவர் ஆவார் இவர். இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் எல்ஐசி ஏஜெண்ட்களில் இவரும் ஒருவர். இவரது வருமானம் எல்ஐசி நிறுவத்தின் தலைவராக உள்ளவரை விட அதிகம். இவர் 35 பேரை வேலைக்கு வைத்து தனியாக கார்ப்பரேட் நிறுவனமே நடத்தி வருகிறார்.

ஒருவர் எப்படிப்பட்ட வேலையில் சேருகிறார் என்பது முக்கியமில்லை. இறுதியில் அவர் எப்படி அந்த துறையில் உச்சபட்ச நிலையை அடைகிறார் என்பது முக்கியம். "உங்களால் கனவு காண முடிந்தால், அதை உங்களால் நிறைவேற்றவும் முடியும் என்ற வால்ட் டிஸ்னி மேற்கொள் பாரத் பரேக்கிற்கு நிச்சயம் பொருந்தும்.
மில்லில் வேலை செய்யும் கூலித்தொழிலாளியின் மகனான பாரத் பரேக் எல்ஐசி ஏஜெண்ட்டாக இருந்து இன்று கோடீஸ்வரராக மாறி உள்ளார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே எல்ஐசி ஏஜெண்டாக மாறியவர். தெருத்தெருவாக சைக்கிளில் எல்ஐசி பாலிசி பிடிக்க கிளம்பினார். 18 வயதில் கிளம்பியர் இன்று 55 வயது ஆகிறது. இன்று சொகுசு காரில் அதே பணியை ஆட்களை வைத்து செய்கிறார். எல்ஐசி பணியை மட்டுமல்ல பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களின் சேவைகளை செய்து வருகிறார்.

எல்ஐசி பாலிசி விற்று அதில் வந்த கமிஷனில் ஆரம்பத்தில் வாழ்க்கையை ஓட்டியவர் ஒரு கட்டத்தில் அவமானங்களை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.எல்ஐசி ஏஜெண்டான பாரத் பரேக்கை இழிவாக பலர் பேசி இருக்கிறார்கள். பாலிசி கேட்டு போனால் அவமானம் செய்து அனுப்பிவர்களே ஏராளம்.. ஆனாலும் மனம் தளராமல், முகம் சுளிக்காமல் இனிமையான பேச்சுக்களால் எல்ஐசி பாலிசிகளை அதிகம் எடுக்க தொடங்கினார்.
நம்பிக்கையான வார்த்தைகள் தான் முக்கியம் என்பதை உணர்ந்த பாரத் பரேக், தன் வாடிக்கையாளர்களிடம் குடும்பத்தில் ஒருவர் போல் பழகீ உள்ளார். அவர்கள் பிறந்த நாள் ,கல்யாண நாள் என விஷேச நாட்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாலிசி எடுத்தவர் இறந்துவிட்டால் அவர்கள் குடும்பத்தினரிடம் நேரில் சென்று அக்கறையுடன் விசாரித்து அவர்களின் பொருளாதார சிக்கலை, கடனை பொறுமையாக கேட்டு அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து, பாலிசி பணத்தை சரியான நேரத்தில் கிடைக்கவும் செய்துள்ளார். இப்படி அக்கறையுடன் இருப்பதை பார்த்தே பலரும் இவரிடம் தான் நாம் எல்ஐசி போட வேண்டும் என்று முடிவெடுத்து நாக்பூரில் பலரும் எல்ஐசி போட்டிருக்கிறார்கள்.
நாக்பூரில் சுமார் 40 ஆயிரம் பேர் எல்ஐசி போட்டிருக்கிறார்கள். இதுவரை 2467 கோடி ரூபாய்க்கு பாலிசிகளை விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். பல்வேறு நிதி சேவைகள் மூலம் அந்த எல்ஐசி ஏஜெண்ட் இப்போது 488 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். எல்ஐசி தலைவரை விட ஐந்து மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்.
எல்ஐசி மட்டுமின்றி ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் உள்பட பல்வேறு வங்கிகளின் சேவைகளையும் அளித்து வருகிறார். நாக்பூரில் கார்ப்பரேட் ஆபிஸ் வைத்து 35 பேரை வேலைக்கு வைத்து பலருக்கு வேலையும் கொடுத்துள்ளார் பாரத் பரேக். சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அவர், அண்மையில் சொகுசு கார் வாங்கி உள்ளார்.

இவர் எப்படி இவ்வளவு வெற்றி பெற்றார் என்று சின்ன வெற்றி ரகசியம் சொல்வது என்றால், காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டது. செல்போன் வந்த போது செல்போனிலும், ஸ்மார்ட்போன் வந்த போது அதற்கும் உடனே அப்டேட் ஆகினார். வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அதுவே அவரது வெற்றிக்காரணமாக இருந்துள்ளது.












Click it and Unblock the Notifications