தமிழக வெள்ளம், ஜல்லிக்கட்டு பிரச்சினை.. மோடியை சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆலோசனை
டெல்லி: தமிழக வெள்ள பிரச்சினை, ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சினைகள் குறித்து பாமக எம்.பி, அன்புமணி ராமதாஸ், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதன்பிறகு நிருபர்களிடம் அன்புமணி கூறியதாவது: சென்னையைவிட மோசமாக பாதிக்கப்பட்டது கடலூர்தான் என்பதை பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

என்எல்சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்தில் பெரும் பிரச்சினை உள்ளது. அந்த நிறுவனத்திற்காக, ஆயிரக்கணக்கான மக்கள், நிலத்தை இழந்துள்ளனர். நிலத்தடி நீர் 1000 அடிக்கு போய்விட்டது. ராட்சத பம்ப்புகள் மூலம், தண்ணீரை என்எல்சி வெளியேற்றியதால்தான் ஊருக்குள் நீர் சென்று பலர் இறந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மோடியிடம் கூறினேன். பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
சென்னை உட்பட மழையால் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் வங்கியில் கடன்பெற்று வீடு, வாகனங்கள் வாங்கியுள்ளனர். அவர்களுக்கு ஓராண்டுக்கு, வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தேன். பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன்.
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வை தள்ளி வைக்க கேட்டுக்கொண்டேன். ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தேன்.. அந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக மோடி தெரிவித்தார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தின் பூஜ்ய நேரத்தில் மழை வெள்ளம் பிரச்சினை பற்றி பேசினேன். ஆனால், அதிமுக உறுப்பினர்கள் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்திற்கு நிதி, நீதி, நியாயம் வேண்டும் என்றுதான் கேட்டேன். பேரிடரை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் அதிமுக எம்.பிக்கள் தமிழ்நாடு சட்டசபை என நினைத்து கூச்சல், குழப்பம் செய்தனர். அவர்கள் முயற்சி பலிக்கவில்லை, நான் பேசிவிட்டேன்.
இயற்கை மட்டுமல்லாமல், செயற்கையும் சென்னை வெள்ளத்திற்கு காரணம் என பேசினேன். முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்துவிட்டதுதான் சேதத்திற்கு காரணம் என்று கூறினேன். இதைத்தான், அதிமுக எம்.பிக்கள் பேசவிடாமல் எதிர்த்து கோஷம் போட்டனர். உலகத்துக்கே தெரிந்த இந்த விஷயத்தை மூடி மறைத்துவிட முடியாது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications