பிரசாந்த் கிஷோரை மீண்டும் அழைக்கும் ஜெகன் மோகன்... என்ன காரணம்?
அமராவதி: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பிரபல அரசியல் திட்டமிடல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை மீண்டும் ஆந்திராவுக்கு அழைத்து அவருக்கு சில பணிகளை கொடுக்க உள்ளாராம்.
ஆந்திர அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் பரவலாக கொண்டு சேர்த்து அரசின் பிம்பத்தை மக்கள் மத்தியில் உயர்த்துவதற்காக ஜெகன் மீண்டும் பி.கே.வின் உதவியை நாடியுள்ளதாக தெரிகிறது.
இதற்காக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிதியிலிருந்து அவருக்கு கட்டணம் செலுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

உத்தி வகுப்பு
கடந்த 10 ஆண்டுகளில் அரசியல் திட்டமிடல் நிறுவனங்கள் பெருமளவில் உருவாகி, ஏதேனும் ஒரு அரசியல் கட்சியை பிடித்து வைத்துக்கொண்டு கல்லா கட்டுவது வாடிக்கையாகி விட்டது. ஆட்சிக்கு வந்துவிடமாட்டோமா என்ற ஏக்கத்தில், எதிர்பார்ப்பில், அரசியல் கட்சித் தலைவர்களும் இது போன்ற நிறுவனங்களை துணைக்கு வைத்துக்கொள்கின்றனர்.

முன்னணி நிறுவனம்
அரசியல் திட்டமிடல் மற்றும் உத்தி வகுப்பு நிறுவனங்களில் முதன்மை இடத்தில் இருப்பது பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் ஆகும். பிரதமர் மோடி, நிதிஷ் குமார், ஜெகன் மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி, என பல முக்கியத் தலைவர்களின் முதன்மை ஆலோசகராக திகழ்ந்தவர் பிரசாந்த் கிஷோர். இப்போது திமுகவுடனும் இணைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

நாயுடு கோபம்
கடந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தனது பிரச்சார உத்தியால் வலிமை மிகுந்த தெலுங்கு தேசம் கட்சியை இருக்கும் இடம் தெரியாமல் மாற்றியவர் பிரசாந்த் கிஷோர். இதனால் கோபப்பட்ட சந்திரபாபு நாயுடு பீகாரில் இருந்து ரவுடியை அழைத்து வந்து ஜெகன் செயல்பட்டு கொண்டிருப்பதாக விமர்சித்தார். ஆனால், எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாத பி.கே. ஜெகனை முதல்வர் நாற்காலியில் அமரவைப்பதற்கான பணிகளை மட்டும் மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டார்.

மீண்டும் அழைப்பு
இந்நிலையில் ஆந்திர அரசு கொண்டு வரும் திட்டங்களை பற்றி மக்களிடம் சரியான புரிதல் இல்லை என்ற தகவல் உளவுத்துறை மூலம் ஜெகனுக்கு எட்ட, இதனால் மீண்டும் பிரசாந்த் கிஷோர் மூலம் அரசு திட்டங்களையும், செயல்பாடுகளையும் அடித்தட்டு மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடிவெடுத்துள்ளார் ஜெகன். இதற்காக அவருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேற்குவங்கத்தில் பிஸியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications