எனக்கு 73, உனக்கு 67... 58 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தாத்தா - பாட்டிக்கு பேரன்கள் முன் திருமணம்!
ஹைதராபாத்: திருமணம் செய்து கொள்ளாமலேயே சுமார் 58 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து குழந்தைகள் பெற்றுக் கொண்ட தம்பதி ஒன்று நேற்று திருமணம் செய்து கொண்டனர்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் குருவங்கா கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி (73). இவரும் ஸ்ரீகாகுளம் மாவட்டம் வீரகட்டம் பகுதியை சேர்ந்த போலம்மாள் (67). இந்த இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த 58 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு பிறந்த நான்கு மகன்களுக்கு மணமுடித்து குழந்தைகள் உள்ளனர். திருமண வயதில் உள்ள பேரன்களும், பேத்திகளும் உள்ள நிலையில், சம்பிரதாய முறைப்படி போலம்மாளைத் தான் திருமணம் செய்து கொள்ளவில்லையே என்கிற கவலை உண்டானது ராமசாமிக்கு.
ராமசாமியின் மனவருத்தத்தை அறிந்த அவரது குடும்பத்தார் அவர்களுக்கு முறைப்படி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, நேற்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ இவர்களது திருமணம் தோட்டபல்லி என்ற கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் எளிமையான நடைபெற்றது.
மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தை கோவிலுக்கு வந்திருந்தவர்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.