'அம்மா உணவகம்' போல ஆந்திராவில் 'அண்ணா' கேன்டீன் தொடக்கம்
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் போல ஆந்திராவில் 'அண்ணா' கேன்டீன் தொடங்கப்பட்டுள்ளது.
கர்னூல்: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள நந்தியாலாவில் நேற்று 'அண்ணா' கேன்டீனை அமைச்சர் நாராயணா தொடங்கி வைத்தார். இதில் ரூ.5-க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகம் என்ற பெயரில் உணவக திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இதில் ஏழைகள் தினமும் வயிறார குறைந்த விலைக்கு உணவு வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அவர் கூறியபடி தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இப்போது அரசு சார்பில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இதே போன்று, ஆந்திராவிலும் மலிவு விலையில் உணவகம் தொடங்க இருப்பதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
அதன்படி தற்போது மாநில தலைநகராக அமைந்துள்ள அமராவதி மற்றும் அனந்தபூர் ஆகிய இடங்களில் சோதனை முயற்சியாக 'அண்ணா' கேன்டீன்கள் இயங்கி வருகின்றன. இதனிடயே, விரைவில் இடைத்தேர்தலை சந்திக்க உள்ள கர்னூல் மாவட்டம் நந்தியாலா பகுதியில் நேற்று 'அண்ணா' கேன்டீனை மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நாராயணா தொடங்கி வைத்தார்.
இதில் ரூ. 5- க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. மேலும் காலையில் இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற சிற்றுண்டிகளும் மலிவு விலைக்கு வழங்கப்படுகிறது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் நாராயணா கூறுகையில், ''விரைவில் ஆந்திரா முழுவதும் 200 'அண்ணா' கேன்டீன்கள் தொடங்கப்படும். அதன் பின்னர் மேலும் 100 கேன்டீன்களை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.
ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமராவை ஆந்திர மக்கள் அன்போடு 'அண்ணாகாரு' என்று அழைப்பது வழக்கம். அவரின் நினைவாக மலிவு விலை உணவகத்துக்கு 'அண்ணா' கேன்டீன் என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications