ஆந்திராவில் தெலுங்கு தேசம் க்ளீன் ஸ்வீப்! ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடு! ஜெகன் கட்சி படுதோல்வி
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இப்போது தொடங்கியுள்ளது.. தற்போது வரை தெலுங்கு தேசம் அதிகபட்சமாக 136 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தெலுங்கு தேசம் கூட்டணியில் உள்ள பவன் கல்யாண் கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஜெகன் கட்சி இப்போது வரை 10 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றன. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன. நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டன.
ஆந்திர தேர்தல்: இதில் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதற்கிடையே இன்று லோக்சபா தேர்தல் முடிவுகளுடன் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இதில் ஆந்திராவைப் பொறுத்தவரை அங்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அவருக்கு எதிராக சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார். பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார். பிரதான போட்டி இவர்களுக்கு இடையே தான் இருக்கிறது. இவை தவிரக் காங்கிரஸ் கட்சியும் களத்தில் உள்ளது.
கடந்த தேர்தல்: ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த தேர்தலில் ஜெகன் கட்சி ஒரு க்ளீன் ஸ்வீப் வெற்றியைப் பதிவு செய்தது. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151இல் வென்று அசுர பலத்துடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார். அந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சியால் வெறும் 23 இடங்களில் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் மற்றும் பாஜகவால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடந்த தேர்தலில் மிகப் பெரிய வெற்றி கிடைத்த போதிலும் இந்த முறை அதே வெற்றியைப் பெறச் சாத்தியம் குறைவே என்று கூறப்பட்டது. எக்ஸிட் போல் முடிவுகளிலும் கூட பெரும்பாலானவற்றில் ஜெகன் கட்சி தோல்வியைத் தழுவும் என்றும் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராவார் என்றே கூறப்பட்டது. அதேபோலவே தேர்தல் முடிவுகளும் அமைந்தன.
வாக்கு எண்ணிக்கை: ஆந்திர மாநிலத்தில் கடந்த மே 13ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் பணிகள் நடந்தன.
தற்போது வரை தெலுங்கு தேசம் அதிகபட்சமாக 136 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தெலுங்கு தேசம் கூட்டணியில் உள்ள பவன் கல்யாண் கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஜெகன் கட்சி இப்போது வரை 10 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆளும் கட்சியாக இருந்த ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் இப்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆளும் கட்சியாக இருந்த ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸால் இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications