கேரளாவிலிருந்து நாய்க்கறி ஏற்றுமதியா.. விலங்குகள் உரிமைக் கழகம் கடும் எதிர்ப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள எடக்கட்டுவயல் கிராமப் பஞ்சாயத்தில் நாய்க்கறியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல் என்ற விலங்குகள் உரிமைக் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது சட்ட முறைகேடான செயலாகும் என்றும் அது கூறியுள்ளது.
கேரளாவில் பெருகி வரும் தெரு நாய்களைப் பிடித்துக் கொல்லும் நடவடிக்கையை அந்த மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கேரள கிராமப் பஞ்சாயத்து ஒன்று தெருநாய்களைப் பிடித்துக் கொன்று அதன் கறியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று தீர்மானம் போட்டுள்ளது சர்ச்சையை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஹியூமன் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜெயசிம்ஹா கேரள சமூக நலத்துறை அமைச்சர் எம்.கே.முனீருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சட்டம்...
2001 விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் (நாய்கள்), 1960 விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தையொட்டி உருவாக்கப்பட்டதாகும்.
நோக்கம்...
தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நாய்க்கடி குறையும், நாய்க்கடியால் ஏற்படும் நோய்கள் குறையும் என்ற எண்ணத்தில்தான் இது கொண்டு வரப்பட்டது.
பொதுவான சட்டம்...
மத்திய அரசு உருவாக்கிய இந்த சட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது. கேரளாவுக்கும் இது பொருந்தும். கேரளாவும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சட்டத்தை மதிக்க வேண்டும்...
இந்த சட்டத்தை உங்களது மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். சட்டத்தை மதித்து நடக்க உத்தரவிட வேண்டும்.
சட்டவிரோதம்...
தெரு நாய்களை கொல்வது, சட்டவிரோதமானதாகும். அறிவியல் பூர்வம் இல்லாத வகையில் நாய்களைக் கொல்வதும், அதன் இறைச்சியை எடுப்பதும் சட்டவிரோதமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
கேரள கிராமப் பஞ்சாயத்து சபை...
கடந்த வாரம் இந்த சர்ச்சைக்குரிய தீர்மானத்தை அந்த கேரள கிராமப் பஞ்சாயத்து சபை நிறைவேற்றியது. கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் கே.ஆர்.ஜெயக்குமார் தான் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
நாய்க்கறி ஏற்றுமதி...
சீனா, தென் கொரியா, வட கிழக்கு மாநிலங்களுக்கு நாய்க்கறியை ஏற்றுமதி செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் தெருநாய்கள் தொல்லையும் குறையும் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது.
மோகன்லால் ஆதரவு...
கேரளாவில் 2014-15 காலகட்டத்தில் 1.06 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்தே தெரு நாய்களைக் கொல்லும் வேட்டையை கேரள அரசு முடுக்கி விட்டுள்ளது. இதை நடிகர் மோகன்லாலும் கூட ஆதரித்து டிவிட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.