ஹஸாரேவை சுட்டுக் கொல்வோம்: ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த 2 கனடா நாட்டவர்
தானே: சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரேவை சுட்டுக் கொல்வோம் என்று ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த கனடாவைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே பாதயாத்திரை செல்ல உள்ளார். இந்நிலையில் அன்னா ஹஸாரேவுக்கு நெருக்கமான மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இருக்கும் கல்யாண் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசோக் கௌதம்(57) என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் கனடாவைச் சேர்ந்த அகன் விது, அவரது நண்பர் நீல் ஆகியோர் கடந்த 3 வாரங்களாக மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

இந்தியாவுக்கு வந்து அன்னா ஹஸாரேவை சுட்டுக் கொல்வோம் என்று அந்த 2 பேரும் ஃபேஸ்புக் மூலம் மிரட்டல் விடுத்து வந்தனர். இதையடுத்து கௌதம் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் அகன் மற்றும் நீல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களின் ஐபி அட்ரஸை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஹஸாரே நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இருந்து வர்தாவில் உள்ள காந்தி ஆசிரமம் வரை 1,100 கிலோமீட்டர் பாத யாத்திரை செல்ல உள்ளார். அவர் சுமார் 3 மாத காலத்தில் இந்த தூரத்தை கடக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications