ஆந்திராவுக்கு அமராவதி, விசாகப்பட்டினம், கர்நூல் தலைநகரங்கள்- அமைச்சரவை ஒப்புதல்
அமராவதி: ஆந்திரா மாநிலத்துக்கு அமராவதி, விசாகப்பட்டினம் மற்றும் கர்நூல் என 3-ம் தலைநகரங்களாக செயல்பட அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனிமாநிலம் உருவானது. இதனால் தெலுங்கானாவின் தலைநகராக ஐதராபாத் மாறியது.

இதையடுத்து ஆந்திராவுக்கு அமராவதி என தனிதலைநகரை உருவாக்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கினார். இதற்காக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் புதிய முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியை தலைநகராக்கும் திட்டத்தை ஒத்தி வைத்தார். மேலும் அமராவதி, விசாகப்பட்டினம் மற்றும் கர்நூல் ஆகியவை 3 தலைநகரங்களாக செயல்படும் என முடிவெடுக்கப்பட்டது.
இதற்கு தெலுங்குதேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜெகன் மோகன் ரெட்டி அரசின் இம்முடிவுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆந்திரா அமைச்சரவை கூட்டத்தில் 3 தலைநகரங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமராவதி- சட்டசபை, விசாகப்பட்டினம்- நிர்வாகம், கர்நூல்- நீதித்துறை என்கிற அடிப்படையில் தலைநகரங்களாக செயல்படும் என அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் ஆந்திரா சட்டசபையிலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications