20 தமிழர் படுகொலைக்கு சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு: ஆந்திரா அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
ஹைதராபாத்: ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு ஆந்திர மாநில அரசுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்பதி அருகே உள்ள சேஷாசல வனப் பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள், ஆந்திர வனத் துறையினரால் கடந்த மாதம் 7-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, உயிரிழந்த தொழிலாளர்களில் ஒருவரான சசிகுமார் என்பவரின் மனைவி முனியம்மாள், ஆந்திர மனித உரிமைக் குழு சார்பில் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா, நீதிபதி பி.வி.சஞ்சய்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ரகுநாத், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு காவல்துறை ஐ.ஜி. ரவிசங்கர் அய்யனார் தலைமை வகிக்கிறார். அவர் குண்டூரில் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த காலகட்டத்தில் ஏராளமான என்கவுன்ட்டர்களை நடத்தியவர் ஆவார்.
அதேபோல், விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள சந்திரகிரி காவல் நிலைய அதிகாரியான சந்திரசேகரும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவர் ஆவார். இவர்கள் அங்கம் வகிக்கும் இந்த விசாரணைக் குழு மூலம் இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும் என நம்ப முடியவில்லை. எனவே, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் ஆட்சேபம் குறித்து சம்பந்தப்பட்ட இரு காவல்துறை அதிகாரிகளும் பதில் மனு தாக்கல் செய்யலாம். இந்தச் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரும் மனுவுக்கான பதிலை ஆந்திர அரசு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்குப் பிறகு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications