தேவதாசி முறை ஒழிப்பு வழக்கில் மெத்தனம் - மத்திய அரசுக்கு ரூ25,000 அபராதம்: சுப்ரீம் கோர்ட் 'சுளீர்'
டெல்லி: சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளுகிற தேவதாசி முறையை ஒழிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்து உத்தவிட்டுள்ளது.
தேவதாசி என்பவர்கள் பெரும்பாலான கோயில்களில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு சிறுவயதில் நேர்ந்து விடப்படும் பெண்கள் ஆவர். இவர்கள் நம்பிக்கைகளின் பெயரால் பாலியல் தொழிலாளிகளாக்கப்பட்டவர்கள்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.எல். பவுண்டேசன் எனும் தொண்டு நிறுவனம், உத்தங்கி மலையில் உள்ள ஒரு கோவிலில் துர்கா பூஜையின் போது தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள் இப்படி தேவதாசிகளாக விடப்படுவதாகவும், இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், இதனை ஒழிக்க மத்திய அரசுக்கும், கர்நாடகா மாநில அரசுக்கும் உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் லலித் மோடி ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தேவதாசி முறை நம் தேசத்திற்கு அவமானது மட்டுமின்றி, மனித உரிமைகளுக்கு எதிரானதாகவும், குழந்தைகளின் உரிமைகளை தட்டி பறிப்பதாகவும் உள்ளது, இதுகுறித்து மத்திய அரசும், கர்நாடகா மாநில தலைமைச் செயலரும் நான்கு வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அறிக்கை தாக்கல் செய்யாத மத்திய அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் 25,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி மாதம் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய இதுதான் கடைசி வாய்ப்பு என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications