apj@abdulkalam.com... இனி யார் இந்த மெயிலுக்கு அனுப்பும் கேள்விகளுக்குப் பதில் அனுப்புவார்...?
கொச்சி: இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட, அதிகம் நேசித்த, அதிக கேள்வி - பதில்களைப் பரிமாறிய இமெயில் ஐடி இதுவாகத்தான் இருக்க முடியும். இனி இந்த இமெயிலிலிருந்து நமக்கு பதில் வராது.. காரணம், அந்த இ மெயிலின் "முகவரி"யை நாம் இழந்து நிற்கிறோம்.
[email protected].. இதுதான் மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் பயன்படுத்தி வந்த இமெயில் முகவரியாகும். இனி இந்த மெயில் ஐடி அமைதியாக உறங்கப் போகிறது. பல லட்சம் இந்தியர்களின் சந்தேகங்களுக்கும், யோசனைகளுக்கும் அயராமல் இந்த இமெயில் மூலம் பதிலளித்து வந்தார் கலாம்.

www.abdulkalam.com என்பது அப்துல் கலாம் பயன்படுத்தி வந்த அதிகாரப்பூவ இணையதளமாகும். அவரது நெருங்கிய உதவியாளரான வி.பொன்ராஜ் இந்த இணையதளத்தை நிர்வகித்து வந்தார். அப்துல் கலாமின் பக்தர்கள் அனைவருக்கும் நிழல் போல திகழ்ந்து வந்தது இந்த இணையதளம். கலாம் பேசியது, கலாமின் சிந்தனைகள், கலாம் கூறிய அறிவுரைகள் என அனைத்தும் இந்த தளத்தில் நிரம்பியிருக்கிறது.
அதேபோல [email protected] என்ற இமெயில் முகவரியை, தான் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் கூட தொடர்ந்து பயன்படுத்தி வந்தார் கலாம். குடியரசுத் தலைவருக்குரிய இமெயில் முகவரியுடன், இந்த தனிப்பட்ட முகவரியையும் அவர் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். வந்து குவிந்த மெயில்களை தவறாமல் படித்தும் வந்தார். பதிலளித்தும் வந்தார்.
2002ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆனது முதல் 2007ம் ஆண்டு வரை கலாமின் இந்த மெயில் ஐடி எப்போதும் பிசியாக இருந்தது. அதற்குப் பிறகு மேலும் பிசியாக மாறியதுதான் கலாமின் சிறப்புக்கு ஒரு சான்று.
இந்த மெயில் ஐடிக்கு வரும் மெயில்களை தவறாமல் படிப்பாராம் கலாம். மேலும் அதில் கேட்கப்படும் கேள்விகள், பதில்களுக்கு தவறாமல் பதிலளிப்பாராம். மிக அருமையான பதில்களாக அவை இருக்கும் என்பதுதான் விசேஷமே. மேலும் தேவையானவற்றுக்கு நடவடிக்கை எடுக்கச் சொல்லி தனது உதவியாளர்களுக்கு அவர் அறிவுறுத்துவாராம்.
நேரில் சந்திக்கும் யாராவது ஏதாவது யோசனை, கருத்துக்களைக் கூறினால் எனக்கு மெயில் அனுப்புங்க சரியா என்று கூறுவாராம் கலாம். அப்படி அனுப்பப்படும் மெயில்களுக்கு விரிவான பதிலும் அனுப்பி வைப்பார் கலாம்.
ஒருமுறை அவருடைய உறவினர் ஒருவர் சுகவீனமடைந்திருந்தார். அப்போது நமது நிருபர், அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேட்டி வேண்டும் என்று கேட்டபோது, எனது பதில் எங்கேயும் போய் விடாது. யாரும் எடுத்து விட மாட்டார்கள். எனது குடும்ப உறுப்பினர் சுகவீனமடைந்துள்ள இந்த நேரத்தில் நான் பேட்டி தர விரும்பவில்லை என்று அமைதியாக பதிலளித்தார் கலாம். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் அவரிடமிருந்து அழைப்பு. உடனே வந்து பேட்டி எடுக்கலாம் என்று.
ஒன்இந்தியா-தமிழ் ஆசிரியர் ஏ. கே. கான், கலாமை சமீபத்தில் சந்தித்தபோது, ஒன்இந்தியா இணையதளம் பல்வேறு மொழிகளில் செயல்பட்டு வருவதை அறிந்து, நீங்கள் போட்டுள்ள அருமையான செய்திகளின் இணைப்புகளை எனக்கு மெயில் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி அனுப்பிய அந்த செய்திகளின் இணைப்புகளை, தனது டிவிட்டர் பக்கத்திலும் அவர் ஷேர் செய்திருந்தார்.
அவர்தான் கலாம்.












Click it and Unblock the Notifications