டிஜிபியா அல்லது சிபிஐ கூடுதல் இயக்குநரா.. இது அர்ச்சனாவின் குழப்பக் கதை!
டெல்லி/சென்னை: அர்ச்சனா ராமசுந்தரம். இந்த நிமிடத்தில் இவரை விட தர்மசங்கடமான ஒரு நபர் உலகில் இருக்க முடியாது என்று கூறலாம். காரணம், இவரை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்த தமிழக அரசு தொடர்ந்து இவரை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக வைத்துள்ளது. அதேசமயம், இவரை கூடுதல் இயக்குநராக நியமித்த சிபிஐயோ, தொடர்ந்து இவர்தான் கூடுதல் இயக்குநராக இருப்பதாக தனது இணையதளத்தில் கூறி வருகிறது.

இப்படி ஒரே நேரத்தில் இரு அமைப்புகளில் பதவியில் இருப்பதாக கூறப்படும் அர்ச்சனா ராமசுந்தரம், உண்மையில் எந்த வேலையில் இருக்கிறார் என்பது பெரும் குழப்பமாக உள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக இருந்து வந்தவர் அர்ச்சனா ராமசுந்தரம். இந்த நிலையில் அவரை சிபிஐ, கூடுதல் இயக்குநராக நியமித்தது. ஆனால் இதில் சேர தமிழக அரசு இசைவு தராமல் இழுத்தடி வந்தது. கிட்டத்தட்ட 3 மாதங்களாக இந்த இழுபறி நீடித்தது. இறுதியில் தமிழக அரசின் இசைவைப் பற்றிக் கவலைப்படாமல் சிபிஐ பணியில் போய்ச் சேர்ந்து விட்டார் அர்ச்சனா.

இதனால் வெகுண்ட தமிழக அரசு சேர்ந்த சில மணி நேரங்களிலேயே அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இது பெரும் சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவை சிபிஐ விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, சிபிஐ பொறுப்பில் அமர்ந்து விட்ட அர்ச்சனா, உடனடியாகவே மத்திய அரசின், சிபிஐயின் ஊழியராகி விடுகிறார். அவரை எப்படி தமிழக அரசு சஸ்பெண்ட் செய்ய முடியும், அது சட்டவிரோதம், செல்லாது என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தற்போது அர்ச்சனாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதில் அவருக்கு சிபிஐ நியமனத்திற்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவர் மீண்டும் தமிழக அரசுப் பணிக்குத் திரும்ப நேரிடும். அப்படி வந்தால் அவரது சஸ்பெண்சன் உத்தரவுக்கு உயிர் கிடைத்து அவர் அதிமுக ஆட்சி முடியும் வரை அதிலேயே நீடிக்க நேரிடும்.
அதிமுக அரசுக்கு இன்னும் 2 ஆண்டு பதவிக்காலம் உள்ளது. ஆனால் அர்ச்சனாவுக்கோ 3 ஆண்டு பதவிக்காலம் உள்ளது. எனவே அதிமுக ஆட்சி முடிந்த பின்னர், ஒரு வேளை திமுக வோ அல்லது வேறு யாரோ ஆட்சியில் அமர்ந்தால்தான் இந்த சஸ்பெண்ட் உத்தரவு ரத்தாக வாய்ப்புள்ளது. அதுவரை அர்ச்சனா பதவியில் இடம் பெறும் வாய்ப்பில்லை என்கிறார்கள்.
தற்போது சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் அர்ச்சனாதான் தலைவர் பதவியில் இருப்பதாக போட்டுள்ளனர். சிபிஐ இணையதளத்திலோ அவர்தான் கூடுதல் இயக்குநர் என்று போட்டுள்ளனர்.
மொத்தத்தில் அர்ச்சனாவின் கதை மிகப் பெரிய மர்ம நாவல் போல மாறியுள்ளது. அதேசமயம், அர்ச்சனாவின் போக்கையும் தமிழக காவல்துறையினர் விமர்சிக்கின்றனர். அதாவது மிகப் பெரிய முக்கியமான, டிஜிபி பொறுப்பி்ல இருந்தவரான அர்ச்சனா, தனது அலுவலகத்தில் முக்கியக் கோப்புகள் எதையும் பார்க்காமல், சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டார் என்றும் முறைப்படி உள்துறைச் செயலாளருக்குக் கூட அவர் தகவல் தெரிவிக்காமல் சிபிஐ பணியில் சேர்ந்து விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆனால் அப்படி முன்கூட்டியே சொல்லியிருந்தால் சிபிஐ பணியில் சேர விடாமல் ஜெயலலிதா அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருப்பார் என்பதால்தான் அதைத் தடுக்கும் வகையில் அர்ச்சனா சத்தம் போடாமல் போய் சிபிஐயில் சேர்ந்து விட்டதாக சொல்கிறார்கள்.
ஆனால் ஜெயலலிதாவின் குணம் தெரிந்த பலரும், இனிமேல் ஜெயலலிதா முதல்வராக இருக்கும் வரை அர்ச்சனாவால் எந்தப் பணியிலும் சேர முடியாது என்று அடித்துக் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications