யார் வேகத்தடை.. நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா?... மோடிக்கு மம்தா பானர்ஜி சவால்
கொல்கத்தா: மேற்கு வங்காள வளர்ச்சிக்கு வேகத்தடை என விமர்சிக்கும் பிரதமர் மோடி நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா என்று மமதா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் காரசாரமாக பேசி வருகின்றனர்.
அந்த வகையில், பாஜக 200 இடங்களில் கூட வெற்றி பெறாது என மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்திருந்தார். இதனை அடுத்து, பிரதமர் மோடி முதலமைச்சர் மமதா பானர்ஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

பிரதமர் சாடல்
பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மமதா பானர்ஜியை கடுமையாக சாடிய மோடி, மமதா பானர்ஜி என்ற படகு மூழ்கப் போகிறது என்றார்.

பின்தங்கிய மாநிலம்
வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டால் பிற மாநிலங்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில், மேற்கு வங்காளம் உள்ளது. மாநிலத்தில் வளர்ச்சி பணிகளுக்கு வழிவிடுவதற்காகவே, தடையை (மமதா பானர்ஜி) அகற்ற நான் காத்திருப்பதாகவும் கூறினார்.

காலாவதியான பிரதமர்
பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி தரும் விதமாக, கூச்பெகர் பிரச்சார கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி, நான் மோடி அல்ல; பொய் சொல்ல மாட்டேன் மோடி காலாவதியான பெரிய மனிதர், காலாவதியான பிரதமர் என்று விமர்சனம் செய்தார்.

மோடிக்கு சவால்
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் பற்றி அவர் தவறான தகவல்களை வெளியிட்டு இருக்கிறார் என்று கூறிய மமதா பானர்ஜி, டிவி சேனலில் அல்லது பொதுக் கூட்டத்தில் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க மோடி தயாரா என்றும் சவால் விடுத்தார்.












Click it and Unblock the Notifications