‘டாடி’ படத்திற்காக தாதா அருண் காவ்லியைச் சந்தித்த நடிகருக்கு சம்மன்!
மும்பை: முன் அனுமதி பெறாமல் தண்டனைக் கைதியாக உள்ள நிழல் உலக தாதா ஒருவரைச் சந்தித்ததற்காக நடிகர் ராம்பாலுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்தவர் அருண் காவ்லி. பின்னர் அரசியல் கட்சியில் சேர்ந்த அருண், கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றார்.

கடந்தமாதம் மருத்துவ பரிசோதனைக்காக மும்பை ஜே.ஜே. மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் அருண். அப்போது பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால், அருணை சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இதற்காக, போலீசாரிடம் அவர் அனுமதி எதுவும் பெறவில்லை.
ராம்பால் தற்போது, 'டாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம், அருண் காவ்லியின் வாழ்க்கை தொடர்பானது. அதனால், காவ்லி பற்றிய விஷயங்களை அறிந்து கொள்வதற்காகவே, அவரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனபோதும், போலீசாரின் அனுமதி பெறாமல் தண்டனைக் கைதியை சந்திக்கக் கூடாது என்பதால், நடிகர் ராம்பாலுக்கு, மும்பை போலீசார் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகரின் வீட்டிற்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது. எனவே, விரைவில் அவர் போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications