இலங்கையில் ராணுவத் தளபதி தல்பீர் சிங்.. 4 நாள் நல்லெண்ண பயணமாக!
டெல்லி: ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். நல்லெண்ண பயணம் என இது அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே ஏகப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தல்பீர் சிங்கின் இலங்கை பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த மாதம் புனேயில் மித்ரா சக்தி என்ற பெயரில் இரு நாட்டு ராணுவமும் இணைந்து கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டன என்பது நினைவிருக்கலாம்.
14 நாள் பயிற்சி
14 நாட்கள் நடந்த இந்த பயிற்சியின்போது தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த உத்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கான ஆயத்த பயிற்சியாகவும் இது நடத்தப்பட்டது.
அதிகாரிகளுடன் சந்திப்பு
தனது இலங்கை பயணத்தின்போது அந்த நாட்டு மூத்த ராணுவத் தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளை தல்பீர் சிங் சந்திப்பார். இலங்கையில் உள்ள பல்வேறு ராணுவ பயிற்சி நிலையங்கள், ராணுவத் தலைமையகம் ஆகியவற்றுக்கும் தல்பீர் சிங் செல்லவுள்ளார்.
தமிழக எதிர்ப்பையும் மீறி
இலங்கையுடன் பாதுகாப்பு ரீதியாக நெருக்கமான உறவை இந்தியா வைத்துக் கொள்ள தமிழகத்தில் பல கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்க வரும் இலங்கைக்கு அதி நவீன ஆயுதங்களைக் கொடுக்க தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
மேலும் மேலும் நெருக்கம்
ஆனால் ராணுவ ரீதியாக தொடர்ந்து இலங்கையுடன் இணக்கமாகவும், நெருக்கமாகவும், இருந்து வருகிறது இந்திய அரசு. மேலும் மேலும் நெருங்கியும் வருகிறது.
இலங்கையின் கேடு கெட்ட செயல்
ஆனால் இதை மனதில் கொண்டாவது தமிழக மீனவர்களைத் தாக்காமல், கைது செய்யாமல் இருக்கலாம் இலங்கை. ஆனால் அது தனது கேடு கெட்ட செயலை ஒருபோதும் நிறுத்தி் கொள்ளவில்லை. இந்தியாவின் உதவிகளையும் பெற்றுக் கொண்டு இந்திய மீனவர்களை தொடர்ந்து துயரப்படுத்தி வருகிறது. அதை இந்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
நேற்று கூட 8 பேர் சிறைபிடிப்பு
நேற்று கூட 8 இந்திய மீனவர்களை சிறை பிடித்துச் சென்றது இலங்கை கடற்படை என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில்தான் ராணுவத் தளபதி தல்பீர் சிங் இலங்கைக்கு நான்கு நாள் நல்லெண்ண பயணமாக வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.