இந்திய ராணுவம் பதிலடி: எல்லையில் நான்கு பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் தகர்ப்பு
குப்வாரா: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் 4 பாகிஸ்தான் ராணுவ முகாம்களை இந்திய ராணுவம் தகர்த்துள்ளதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் துல்லிய தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து வரும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கையால் கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் 15 பேர் உயிரிழந்தனர். ஆனால் இதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் அத்துமீறலை நிறுத்தாவிட்டால் தக்க பாடம் புகட்டுவோம் என இந்திய ராணுவ தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரை பிரதமரின் அலுவலக இணையமைச்சர் விஜேயந்தர் சிங் பாதுகாப்பு படையினரை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்களின் வீர, தீர செயல்களை அவர் பாராட்டினார். இதனிடையே ஜம்மு காஷ்மீரில் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி சுட்டதில் பி.எஸ்.எஃப் ஜவான் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹிரா பகுதியில் இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் 4 எல்லை நிலைகள் அழிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆர்.எஸ்.புரா, ஹிரா நகர் மற்றும் சம்பாவில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்
வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் கேரன் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் மேற்கொண்ட பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் 4 தகர்க்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கேரன் செக்டாரில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் மேற்கொண்டதில் 4 பாகிஸ்தானிய முகாம்கள் தகர்க்கப்பட்டன என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
பாகிஸ்தான் தரப்பில் சில உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக கூறிய அவர் மேல் விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் நடத்தியதற்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.