மசூதியில் ‛ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட முஸ்லிம்களை வலியுறுத்திய ராணுவம்? மெகபூபா பரபரப்பான குற்றச்சாட்டு
ஜம்மு காஷ்மீர்: புல்வாமாவில் உள்ள மசூதியில் ராணுவத்தினர் நுழைந்து முஸ்லிம்களை ஜெய்ஸ்ரீராம் கோஷமிட வலியுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி முக்கிய தகவலை கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் இருந்த சட்டப்பிரிவு 370யை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கான உத்தரவு என்பது 2019 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.

மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த நிலையில் காஷ்மீர் மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பினாலும் கூட அதனை மத்திய அரசு செய்து முடித்தது. மேலும் தற்போது அங்கு தொகுதி மறுவரை பணிகள் முடிந்துவிட்டன.
காஷ்மீர் மற்றும் லடாக்கில் தற்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு தான் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டாலும் கூட அங்கு பயங்கரவாத நடவடிக்கை என்பது தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டையும் நடந்து வருகிறது.
இதற்கிடையே தான் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அமித்ஷா தொடங்கி வைத்தார். அதோடு மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு வெற்றி பேரணியையும் நடத்தினார். அதன்பிறகு ஸ்ரீநகரில் உள்ள ராஜ் பவனில் லெப்டினன்ட் ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் ராணுவம், போலீஸ், துணை ராணுவப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகளுடன் ஆோலசனை நடத்தி டெல்லி திரும்பினார்.
இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி எனும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரானவருமான மெகபூபா முப்தி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: புல்வாமாவில் உள்ள மசூதியில் முஸ்லிம்களை ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பும்படி 50ஆர்ஆர் ராணுவத்தினர் வலியுறுத்துவதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இது அமித்ஷா இங்கு இருந்தபோது அதுவும் யாத்திரைக்கு முன்பாக நடந்து இருப்பது ஆத்திரமூட்டும் செயலாகும். இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று ராஜீவ் காயை கேட்டு கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
இதில் மெகபூபா முப்தி குறிப்பிட்ட ராஜீவ் காயி ராணுவ அதிகாரியாவார். ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனராலாக இருக்கும் ராஜீவ் காய் சமீபத்தில் தான் ஸ்ரீநகரை தளமாக கொண்ட சினார் கார்ப்ஸின் தளபதியாக பொறுப்பேற்றார். இவர் காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் பாகிஸ்தானுடனா எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பிரச்சனை தொடர்பான பணிளுக்கு பொறுப்பானவர். இந்நிலையில் தான் மெகபூபா முப்தி விசாரணை நடத்த வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications