விபத்து நடந்த ரயிலுக்குள் இருந்த ராணுவ வீரர்கள் பலரை காப்பாற்றினர்.. உயிர் தப்பிய தமிழர் உருக்கம்!
புவனேஸ்வர் : நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் உயிர் தப்பிய பயணி ஒருவர், ரயிலில் சிக்கிய பலரை விடுமுறைக்கு சென்னைக்கு சென்ற ராணுவ வீரர்கள் காப்பாற்றியதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 261 ஆக உள்ளது. இந்தக் கோர விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் ரயில்வே துறை, பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் மக்கள் மேற்கொண்டுவந்த மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விபத்து நடந்த பகுதியை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்தோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கொடூரமான ரயில் விபத்தில் உயிர் தப்பிய பலரும், தாங்கள் உயிருடன் இருப்பதையே நம்ப முடியாமல் பதற்றத்துடன் பேசியுள்ளனர். அந்தவகையில், விபத்தில் சிக்கிய ரயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் பயணித்துள்ளார். அவர், ரயிலில் இருந்த பலரை, ரயிலில் பயணித்த ராணுவ வீரர்கள் காப்பாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்து உயிர் தப்பிய விக்னேஷ் என்பவர் அளித்துள்ள பேட்டியில், "பாலசோர் ஸ்டேஷன் தாண்டி 15-20 நிமிடங்களில் ரயில் விபத்து நடந்தது. இரவு 7 மணியளவில் ரயில் விபத்து நடைபெற்றதால், சுற்றிலும் இருட்டாக இருந்தது. எனக்கு காலில் எலும்பு முறிவு இருந்தது. என்னால் யாருக்கும் எந்த உதவியும் செய்ய முடியவில்லை. உள்ளூர் மக்கள் விரைந்து வந்து தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தனர்.
நாங்கள் இருந்த பெட்டிகளிலேயே ராணுவ வீரர்கள் பலர் இருந்தனர். சென்னைக்கு விடுமுறைக்குச் செல்லும் ராணுவ வீரர்கள் இந்த ரயிலில் பயணித்தனர். அவர்கள் கடவுள் போல பெட்டிக்குள் சிக்கிக்கொண்ட பலரையும் மீட்டனர். பலருக்கு முதலுதவிகளையும் செய்தனர்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications