அர்னாப் கோஸ்வாமி யாருடன்தான் பஞ்சாயத்துக்கு போகலை... ஓயாத சர்ச்சைகள்! #arnabgoswami
டைம்ஸ் நவ் டிவி தலைமை செய்தி ஆசிரியர் பணிக் காலத்தில் அர்னாப் கோஸ்வாமி உருவாக்கிய சர்ச்சைகளின் கதை இது.
டெல்லி: டைம்ஸ் நவ் டிவியில் அர்னாப் கோஸ்வாமி 'கத்திக் கொண்டிருக்கும்' வேலையை கச்சிதமாக செய்யவில்லை.. பல களேபர சர்ச்சைகளின் கதாநாயகனாகவும் இருந்திருக்கிறார்.
டைம்ஸ் நவ் டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டார் அர்னாப் கோஸ்வாமி. டைம்ஸ் நவ் டிவியை ரேட்டிங்கில் முதலிடத்தில் தக்க வைத்திருந்தார் என்பது மட்டுமல்ல அர்னாப் கோஸ்வாமிக்கான பெருமை..
அர்னாப் கோஸ்வாமி சிக்கிய சர்ச்சைகளை வைத்தை 'India wants to Know' என்ற தலைப்பில் 100 மணிநேர விவாதமே நடத்தலாம்.
கடந்த ஆண்டு இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவினார்; இது தொடர்பான மின் அஞ்சல்கள் வெளியாகின... டைம்ஸ் நவ் டிவிதான் முதலில் இதை வெளியிடுகிறது என அடித்துவிட்டுக் கொண்டிருந்தார் அர்னாப். ஆனால் சக பத்திரிகையாளர்களோ, ஏன் இந்த வேலை? இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் முதலில் வெளியிட அதை காப்பியடித்துவிட்டு இந்த காட்டு கூச்சல் என கிழித்து தொங்கவிட்டன.
அண்மையில் ஜம்மு காஷ்மீரில் வன்முறை வெடித்த போது என்டிடிவியின் பர்கா தத் அங்கு நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அம்பலப்படுத்தினார். ராணுவத்தின் அடக்குமுறைகள் குறித்தும் அதில் இடம்பெற்றிருந்தன. உடனே அவரை தேசவிரோதி என சாடினார் அர்னாப் கோஸ்வாமி. இதற்கு பர்கா தத் கொடுத்தது பதிலடி 'அர்னாப் கோஸ்வாமியால் நான் வெட்கப்படுகிறேன்...அவரெல்லாம் ஒரு பத்திரிகையாளரா? என்பதுதான்..
கர்நாடகா ராஜ்யாபா சபா தேர்தலின் போது குதிரை பேரம் நிகழ்ந்தது. மும்பையில் கர்நாடகா எம்.எல்.ஏ.க்களை கர்நாடகா தொழிலதிபர் அசோக் கெனி தங்க வைத்திருந்தார். டைம்ஸ் நவ் மும்பை பெண் நிருபர் மேகா பிரசாத் சிக்கினார்.. இடைவிடாமல் அசோக் கெனியிடம் மேனகா கேள்வி எழுப்ப அவரை ஆபாசமாக திட்டினார் அசோக் கெனி. விடுவாரா அர்னாப் கோஸ்வாமி... அசோக் கெனியுடன் பெரும் அக்கப்போரையே நடத்தினார்.
தமிழகத்தைச் சேர்ந்த மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தியை ஓரிரு முறை விவாதங்களுக்கு அழைத்துவிட்டு அவரை பேசவிடாமல் குறுக்கிட்டு மல்லுக் கட்டியவர் அர்னாப் கோஸ்வாமிதான்...
இப்படியெல்லாம் அர்னாப் கோஸ்வாமி ருத்ர தாண்டவமாடிவிட்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்விகள் கேட்கும் போது மட்டும் பம்மினாரே பாருங்கள்... அப்பா சாமி 'உலகமகா நடிப்புடா' என்பதாகத்தான் இருந்தது.