ம்ஹூம்.. முடியாது.. காரிலிருந்து இறங்க மறுத்த நடிகை அர்பிதா.. அதிகாரிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?
கொல்கத்தா: ஆசிரியர் பணிக்கு ஆள் சேர்ப்பு விவகாரத்தில் முறைகேடு செய்ததாக அமலாக்கத்துறையினால் நடிகை அர்பிதா முகர்ஜியும் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் காரிலிருந்து இறங்க மறுத்ததால் வலுக்கட்டாயமாக தூக்கி அவரை சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்து சென்றனர் அதிகாரிகள். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை இந்த அரசு கடைப்பிடித்து வருகிறது. கட்சியின் முன்னாள் பிரமுகர் சுவேந்து அதிகாரி பாஜக பக்கம் தாவி சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மமதாவுக்கு எதிராகவே களம் கண்டார். இந்நிலையில் இம்மாநிலத்தில் அரசியல் களம் எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறது.

ஊழல்
இப்படியான சூழலில் பள்ளி சேவை ஆணையம் மற்றும் மேற்கு வங்க முதன்மைக் கல்வி வாரியத்தில் ஆட்சேர்ப்பு விவகாரத்தில் அதாவது ஆசிரியர் தேர்வு விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக அவ்வப்போது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதனையடுத்து கடந்த 22ம் தேதி மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிரடியாக ரெய்டில் இறங்கியது. இந்த ஊழல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டார்ஜிக்கு தொடர்புடைய 13 இடங்களில் சோதனையை மேற்கொண்டது.

ரூ.50 கோடி பறிமுதல்
பார்த்தாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடங்களிலும் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர் ஆசிரியர் ஆட்சேர்ப்பு பணியில் ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டவராவார். இதனையடுத்து ரெய்டில் சுமார் ரூ.50 கோடி அளவில் கணக்கில் வராத ரொக்கமும், ரூ.2 கோடி அளவிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணம் பள்ளி சேவை ஆணையத்தில் ஆட்சேர்ப்பு விவகாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக பெறப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் 23ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

பரிசோதனை
இதனையடுத்து அவர்கள் ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின்படி இன்று அர்பிதா கொல்கத்தாவின் ஜோகாவில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் அவர் காரிலிருந்து இறங்க மறுத்துவிட்டார். அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எவ்வளவோ வலியுறுத்தியும் அர்பிதா காரிலிருந்து இறங்க மறுத்துவிட்டார். இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக காரிலிருந்து வெளியேற்ற முயன்றனர். அப்போது அர்பிதா அடம் பிடித்து அழத்தொடங்கிவிட்டார்.

சக்கர நாற்காலியில்
ஒருவழியாக பாதுகாப்பு அதிகாரிகள் அர்பிதாவை வெளியில் கொண்டு வந்தனர். ஆனால் அவர் தரையில் அமர்ந்து மருத்துவமனைக்குள் செல்ல மறுத்துவிட்டார். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அருகில் இருந்த சக்கர நாற்காலியை கொண்டு வந்து அதிர் அர்பிதாவை அமர வைத்து பின்னர் மருத்துவமனைக்குள் கொண்டு சென்றனர்.
கடந்த 2016ம் ஆண்டு காலகட்டத்தில் இந்த ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில்தான் பார்த்தா கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார். இதனையடுத்து நடிகை அர்பிதா முகர்ஜிக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அர்பிதா 2008-2014 வங்க மற்றும் ஒடியா மொழி திரைப்படங்களில் நடிகையாக வலம்வந்தவராவார்.












Click it and Unblock the Notifications