நித்தியானந்தாவைக் கைது செய்து ஆண்மைப் பரிசோதனை நடத்துங்க - கர்நாடக கோர்ட் அதிரடி உத்தரவு!
பெங்களூர்: ஆண்மைப் பரிசோதனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு சாமியார் நித்தியானந்தா வராத காரணத்தால் அவரைக் கைது செய்து ஆண்மைப் பரிசோதனை செய்து, அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கர்நாடக போலீஸாருக்கு, ராம்நகர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டையும் ராம்நகர் கோர்ட் பிறப்பித்துள்ளது.

கர்நாடாவில் உள்ள பிடதியில் ஒரு ஆசிரமத்தை வைத்திருக்கிறார் நித்தியானந்தா். அங்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகஒரு சர்ச்சை எழுந்தது. மேலும் நடிகை ரஞ்சிதாவுடனும் அவர் அந்தரங்கமாக இருந்ததாகவும் சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக கர்நாடக போலீஸார் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.
அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் போலீசார் முடிவு செய்த போது, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் அவ்வாறு சோதனை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார் நித்தியானந்தா. பல வருடங்களாக இம்மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நித்தியானந்தாவின் வேண்டுகோளை கோர்ட் நிராகரித்தது.
மேலும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நித்தியானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என்று பெங்களூர் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்த நிலையில், ராம்நகர் நீதிமன்றத்தில் இன்று நித்தியானந்தா தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது நித்தியானந்தா ஆஜர் ஆகவில்லை.
இதையடுத்து அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 6-ம் தேதி அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தி, 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications