ஊழலை ஒழிக்க உயிர்த்தியாகம் செய்ய தயார்- " 49 நாள் முதல்வர்" கேஜ்ரிவால் சபதம்!
டெல்லி: ஊழலை ஒழிப்பதற்காக உயிர்த்தியாகம் செய்யவும் தயார் என்று 49 நாள் டெல்லி மாநில முதல்வர் பதவி வகித்து நேற்று ராஜினாமா செய்த அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை கூட்டம் நேற்று மாலை முடிந்ததும் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார் கேஜ்ரிவால். பின்னர் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.
கொட்டும் மழையில் அங்கு திரண்டு வந்த தொண்டர்கள் மத்தியில் கேஜ்ரிவால் பேசியதாவது:
பதவியை ராஜினாமா செய்வது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்து இருக்கிறோம். சட்டசபையை கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தும்படி ஆளுநருக்கு சிபாரிசு செய்து இருக்கிறோம்.

எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட இரண்டு நாட்களில் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் ஒன்று சேர்ந்து எங்கள் அரசை வீழ்த்த திட்டமிட்டனர். அவர்களுடைய உண்மையான முகம் வெளுத்துவிட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியை அம்பானிதான் நடத்தி வந்தார். காங்கிரஸ் கட்சி அவருடைய சொந்த கடையை போன்றது. அவர் எப்போது விரும்பினாலும் தேவையானதை அந்த கடையில் வாங்கிக் கொள்ளலாம். கடந்த ஓராண்டு காலமாக நரேந்திரமோடிக்கு பின்னாலும் அம்பானிதான் இருந்து வருகிறார். நாடு முழுவதிலும் விமானம், ஹெலிகாப்டர்களில் பறந்து தேர்தல் பிரசாரம் செய்வதற்குப் பணம் எங்கிருந்து வந்தது?
காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளாக மின்சார நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்யவில்லை. 5 நாட்களில் அந்தப்பணியை நாங்கள் செய்தோம். 65 ஆண்டுகளாக அவர்கள் ஊழலை ஒழிக்கவில்லை. ஷீலா தீட்சித் செய்த ஊழலுக்கு எதிராக நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம்.
இதையெல்லாம் செய்யாமல், ஆட்சி நிர்வாகத்தை மட்டும் பாருங்கள் என்று அவர்கள் கூறினார்கள். ஊழல் செய்தவர்களை ஜெயிலுக்கு அனுப்புவது ஆட்சியாளர்களின் வேலை இல்லையா?
நான் தனி மனிதன் அல்ல. நான் உங்களில் ஒருவன் ஆட்சியில் அமருவதற்காக நான் அரசியலுக்க வரவில்லை. ஊழலை ஒழிப்பதற்காக எங்கள் அமைச்சர்களில் சிலர் இரவு பகலாக தூங்காமல் மக்கள் பணியாற்றினார்கள்.
ஊழலை ஒழிப்பதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பதவி விலக தயாராக இருக்கிறேன். கடைசியாக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதெல்லாம், ‘நாங்கள் மிகவும் சாதாரணமானவர்கள். எங்களுக்கு நல்ல எண்ணங்களை கொடுங்கள். அதன் மூலம் ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட இந்த நாட்டின் நன்மைக்காக உயிர்த்தியாகம் செய்யவும் நாங்கள் தயாக இருக்கிறோம்
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.












Click it and Unblock the Notifications