எதிரிகளின் நீர்முழ்கிகளை தாக்கி அழிக்கும் ஐஎன்எஸ் கமோர்த்தா கடற்படையில் இணைப்பு
விசாகப்பட்டினம்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பலான ஐஎன்எஸ் கமோர்த்தாவை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி இன்று முறைப்படி கடற்படைக்கு அர்ப்பணித்தார்.
கொல்கத்தாவிலுள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த போர்க் கப்பலில், நீர்முழ்கிகளுக்கு எதிரான தாக்குதல் தொடுப்பதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட "ராக்கெட் லாஞ்சர்' பொருத்தப்பட்டுள்ளது.

கடற்படையில் இணையும் விழாவுக்காக இந்தக் கப்பல் கொல்கத்தாவிலிருந்து விசாகப்பட்டினத்திலுள்ள கடற்படைத் தளத்துக்கு கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டது.
இந்த போர்க்கப்பல், சாதாரண நாசகாரிகளைவிட சிறியதும், வெகு வேகமாக மற்றும் சுலபமாக இயக்கக்கூடியதுமான "கார்வெட்' ரகத்தைச் சேர்ந்தது.
எதிரிகளின் ராடார் கண்களுக்குப் புலப்படாமல், ரகசியமாக இயங்கும் அம்சங்களைக் கொண்டுள்ள நவீன கப்பலான இதில், ராடார்களின் கவனத்தை திசைத்திருப்பி குழப்பமேற்படுத்தும் "கவச்' (கவசம்) என்ற புதிய வகை "சாஃப் லாஞ்சர்' முதல்முறையாக பொருத்தப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம்.
சுமார் 3,400 டன் எடைத்திறன் கொண்ட இந்தக் கப்பல் மணிக்கு 25 நாட்டிகல் மைல் வரையிலான வேகத்தில் செல்லக்கூடியது. இதில் ஹெலிகாப்டர்களையும் நிறுத்தமுடியும் என்பது, எதிரிகளின் நீர்முழ்கிக் கப்பல்களுக்கு கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய அம்சமாகும்.












Click it and Unblock the Notifications