'கறுப்பு முதலைகள்’ பற்றி சுவிஸ் அரசு கடிதம் எதுவும் அனுப்பவில்லை... அருண் ஜெட்லி
டெல்லி: கருப்பு பண விவகாரம் தொடர்பாக, சுவிஸ் அரசிடம் இருந்து இதுவரை எந்த தகவலையும் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
சுவிட்சர்லாந்தில் உள்ல 283 வங்கிகளில் இந்தியர்கள் உட்பட பலர் தங்களது கருப்பு பணத்தை மறைத்து வருகின்றனர். அங்குள்ள வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள பணம் மட்டும் சுமார் ரூ 14 ஆயிரம் கோடி என சமீபத்தில் அந்நாடு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கருப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிடுமாறு கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சுவிட்சர்லாந்திடம் கோரிக்கை விடுத்தது. ஆனால், அதனை அந்நாடு மறுத்து விட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது பதவியில் அமர்ந்துள்ள பாஜக தலைமையிலான அரசும், சுவிஸ் வங்கிகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக்குழு, கறுப்பு பண மீட்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், நேற்று சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது இந்தியாவிற்கு தரப்படும் எனவும் அந்நாடு அறிவித்தது. இதனால் தொழிலதிபர்கள் மற்றும் தலைவர்களின் முகமூடி கிழியும் என எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், சுவிட்சர்லாந்தில் இருந்து கறுப்புப் பணம் தொடர்பாக இதுவரை தகவல் எதுவும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது :
கருப்பு பண விவகாரம் தொடர்பாக நாங்கள் சுவிஸ் அரசிடம் இருந்து எந்த தகவலையும் பெறவில்லை. இதுவரையில் சுவிஸ் அரசுடன் எந்த தகவல் பரிமாற்றமும் இல்லை. இவ்விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுவோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications