340 கிராமப்புற லோக்சபா தொகுதிகளை குறிவைத்து 'பாசாங்கு' பட்ஜெட் தாக்கல் செய்த அருண்ஜேட்லி
Recommended Video

டெல்லி: 4 ஆண்டுகால ஆட்சியில் கிராமப்புற ஏழைகளை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் இருந்துவிட்டு தேர்தல் வரப்போகிறது என்பதற்காக பட்ஜெட்டில் கரிசன மழையை கொட்டியிருக்கிறது பாஜக அரசு.
மாற்றம் தருவோம்.. ஏற்றம் அளிப்போம் என ஏகப்பட்ட வாக்குறுதிகளை மோடியை முன்னிறுத்தி 2014 லோக்சபா தேர்தலில் அள்ளிவிட்டது பாஜக. இதையும் நம்பி வாக்குகளை அள்ளிக் கொடுத்தனர் ஏழை எளிய மக்கள்.
இதனால் 282 தொகுதிகளில் வென்று மத்தியில் பலம் வாய்ந்த மத்திய அரசை அமைத்தது பாஜக. ஆட்சிக்கு வந்ததுதான் தாமதம்... அறிவித்த வாக்குறுதிகள் பற்றி எந்த கவலையும்படாமல் மக்களை பிளவுபடுத்துகிற வெறுப்பரசியலை வேகமாக செயல்படுத்தியது பாஜக.

மவுனியாக பாஜக
இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, வழக்குகளில் இருந்து தப்பிக்க வழி, கலகக் குரல் எழுப்பினால் பலியெடுத்தல் என அத்தனைவித நாசகார செயல்களையும் இந்துத்துவா அமைப்புகள் பாஜக அரசின் ஆதரவுடன் அரங்கேற்றின. அத்தனைக்கும் பாஜக மத்திய அரசு மவுனியாகவே இருந்தது.

தமிழகத்தின் மீது திணிப்பு
மக்கள் விரும்பாத திட்டங்களை வலிய திணிப்பதை கொள்கையாகவே கொண்டிருக்கிறது பாஜக. தமிழகம் விரும்பாத மீத்தேன், நியூட்ரினோ, கெயில் எரிவாயு, நீட் தேர்வு என அத்தனையையும் திணித்தது. மக்களுக்கு தேவையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சொன்னால் எதிர்ப்பது என மக்கள் விரோத அரசாக உருமாறியது பாஜக.

பலநூறு உயிர்கள் பலி
இதனால் மக்களிடம் செல்வாக்கை பறிகொடுத்துவிட்டது பாஜக அரசு. இதன் உச்சமாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. கிராமப்புற எளிய மக்களை வாட்டி வதைத்து பல நூறு உயிர்களை குடித்தது இந்த பணமதிப்பிழப்பு. இப்படி 4 ஆண்டுகாலத்தை ஓட்டிவிட்டு இப்போது மீண்டும் தேர்தலில் வெல்லலாம் என்கிற நப்பாசையில் பட்ஜெட்டில் வித்தை காட்டியிருக்கிறது பாஜக அரசு.

சமாளிக்க பட்ஜெட்
நாட்டின் 543 தொகுதிகளில் 340 இடங்கள் கிராமப்புறங்களில்தான் இருக்கின்றன. கிராமப்புற மக்கள் மத்திய பாஜக அரசு மீது கடும் அதிருப்தியிலும் கொந்தளிப்பிலும் இருக்கிறார்கள். இவர்களை நலத்திட்டங்கள் பெயராலும் நிதி உதவிகளின் பெயராலும் வளைத்துவிடலாம் என்கிற மிதப்பில்தான் பட்ஜெட்டில் அறிவிப்பு மழையை கொட்டியிருக்கிறது பாஜக அரசு.

பலனா? பாடமா
நகர்ப்புற, நடுத்தர மக்களிடத்தில் பாஜகவின் உண்மை சுயரூபம் அப்பட்டமாக அம்பலமாகிப் போனது. இனி ஒருநாளும் பாஜகவை ஆட்சி அமைக்க இந்த வாக்காளர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறது மத்திய அரசு. இதனால் இந்த பட்ஜெட் முழுமையாக கிராமப்புற வாக்காளர்களை இலக்கு வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் இந்த பாசாங்கு மழைக்கு பலன் கிடைக்குமா? பாடம் கிடைக்குமா? என்பது தேர்தலில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications