இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாசலப் பிரதேசம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

அருணாசலப் பிரதேச சட்டசபையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
அருணாசலப் பிரதேசத்தை இந்தியாவிலிருந்து ஒருபோதும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், அருணாசலப் பிரதேசத்துக்குமான சாலை வசதி உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு இங்குள்ள மக்களும், சட்டசபை உறுப்பினர்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள அண்டை நாடுகளுடன் இந்தியா வரலாற்று ரீதியாக நல்லுறவு கொண்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, அருணாச்சலப் பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் பாலமாக விளங்குகின்றன.
இந்த மாநிலத்தில் நீர் மின் திட்டங்களை நிறைவேற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அவ்வாறு முடித்து விட்டால், இந்தியாவிலேயே மிகவும் பணக்கார மாநிலமாக அருணாச்சலப் பிரதேசம் திகழும்.
அருணாச்சலப் பிரதேசம் மூன்று நாடுகளுடன் பொதுவான எல்லையைக் கொண்டிருப்பதால், இங்கு வளர்ச்சியை மேம்படுத்துவது மிகவும் முக்கியமாகும் என்றார்.
இதனிடையே அருணாசலப் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சிக்கலான எல்லை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பாதது திருப்தி அளிக்கிறது என்று சீனா கூறியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி, சீனாவுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கான முயற்சிகளில், பாதி தொலைவை இந்தியா பாதுகாப்பாக கடந்துள்ளது என சீனா நம்புகிறது.
சிக்கலுக்குரிய எல்லை தொடர்பான கேள்விகளை தவிர்த்து, அமைதியை நிலைநாட்டுவதற்கு சீனாவுடன் இணைந்து இந்தியா பணியாற்ற வேண்டும் என்றார்.
எல்லைப் பகுதியில் அமைதி நிலவவும், எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்தவும் இந்தியா முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங், அருணாசலப் பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டபோது எரிச்சலடைந்த சீனா, தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பயணத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications