டெல்லியில் ஆட்சி: கட்சிக்குள் குழப்பம் நிலவுவதாக கெஜ்ரிவால் ஒப்புதல்
டெல்லி: டெல்லியில் ஆட்சி அமைப்பதில் கட்சிக்குள் குழப்பம் நிலவுவதாகவும், அதனாலேயே தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களிடமே தீர்வு கேட்டு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. அதைத் தொடர்ந்து துணைநிலை கவர்னர் நஜீப் ஜங் 2-வது பெரிய கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் அந்தக் கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலும், தனக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறி முதலில் மறுத்து விட்டார்.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. ஆனால், ஆட்சி அமைக்க சில நிபந்தனைகளை விதித்தார் கெஜ்ரிவால். அதில், 'நாங்கள் ஆட்சி அமைப்பதில் 18 முக்கிய பிரச்சினைகளில் உங்கள் நிலை என்ன?' என்று கேட்டு, அவற்றைப் பட்டியலிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு கடிதமாக அனுப்பினார்.
ஆனால், காங்கிரஸ் அதற்கு பதில் கடிதம் அனுப்பிய நிலையில், தொடர்ந்து பாஜக மவுனம் காத்து வருகிறது.இந்நிலையில் நேற்றோடு டெல்லியில் புதிய ஆட்சி அமைக்க கெடு முடிவடைந்துள்ள நிலையில், குடியசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. அது குறித்தான் முடிவு இன்று எடுக்கப் பட உள்ள நிலையில், தாங்கள் ஆட்சி அமைப்பது குறித்து டெல்லி மக்களிடமே கருத்துக் கேட்க இருப்பதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் நேற்று முந்தினம் தனது கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள், அரசியல் விவகாரக்குழு உறுப்பினர்களை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-

மாறுபட்ட கருத்துக்கள்....
இந்த கூட்டத்தில் "நாம் ஆட்சியை அமைக்கலாம், ஆட்சியை கவிழ்ப்பதற்கு முன்பாக 2 அல்லது 3 நல்ல காரியங்களை செய்து விடலாம்" என்று எங்கள் கட்சியினர் சிலர் கூறினர். இன்னும் சிலரோ அதிகாரத்துக்கு வர வேண்டாம் என்றனர்.

பதில் இல்லை...
எங்களது 18 நிபந்தனைகள் தொடர்பாக காங்கிரஸ் பதில் கடிதம் எழுதி உள்ளது. இதில் 16 நிபந்தனைகள் அரசு நிர்வாகம் தொடர்பானவை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பாரதிய ஜனதா பதில் கடிதம் எழுதவில்லை.

கடிதங்கள் வாயிலாக....
இன்னும் 6 மாதத்திற்கு பிறகு ஆட்சியை காங்கிரஸ் நிச்சயம் கவிழ்த்துவிடும் என்ற நிலையில், எப்படி அவர்களின் ஆதரவை பெற முடியும்? டெல்லியில் நாங்கள் ஆட்சி அமைப்பது குறித்து (காங்கிரஸ் - பாரதிய ஜனதா ஆதரவைப் பெறுவது பற்றி) மக்களின் கருத்துக்களை அறிய 25 லட்சம் கடிதங்கள் வினியோகிக்கப்படுகின்றன.

சமூக வலைத்தளம் மூலமாக....
இது தொடர்பாக மக்களின் பதில்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பெறப்படும். பொதுமக்கள் தங்கள் பதிலை குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வழியாக 08806110335 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம். 'பேஸ்புக்' சமூக வலைத்தளத்திற்குள் போயும் பதிவு செய்யலாம். அதைத் தொடர்ந்து எங்கள் நிலைப்பாடு என்ன என்பதை 23-ந்தேதி பகிரங்கமாக அறிவிப்போம். துணை நிலை கவர்னருக்கும் தெரிவிப்போம்' என்றார்.

தவறான தகவல்கள்....
மேலும், அன்னா ஹசாரேயுடனான கருத்து மோதல் குறித்து கூறுகையில், அன்னாவைக் குறித்து நான் விமர்சனம் தெரிவிப்பது போல பல தவறான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இது சில மர்ம நபர்களின் சதி. வேண்டுமென்றே அவர்கள் இவ்வாறு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவை முற்றிலும் தவறானவை' என மறுப்புத் தெரிவித்தார்.

தனிப்பட்ட விருப்பமில்லை....
இந்நிலையில், நேற்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ‘மிகக் குறைந்த எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு கூட்டணி தயவுடன் டெல்லியில் எங்கள் கட்சியின் ஆட்சி அமைவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பம் இல்லை.

இருவேறு கருத்துக்கள்...
காங்கிரஸ் கட்சியிடமோ, பா.ஜ.க.விடமோ ஆதரவு கேட்பதில்லை என்ற ஆரம்பகால நிலைப்பாட்டில் நான் இன்னும் உறுதியாகவே இருக்கிறேன். எங்கள் கட்சியினரிடையே கூட ஆட்சி அமைப்பது தொடர்பாக இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

மக்கள் தீர்ப்பே...
அதனால் தான், மக்கள் கருத்தின்படி செயல்பட முடிவெடுத்து பொது கருத்து கணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களது முடிவு எனது மனநிலைக்கு ஆதரவாக இருந்தாலும், எதிர்ப்பாக அமைந்தாலும் கருத்து கணிப்பு முடிவுகளுக்கு பிறகு மக்களின் தீர்ப்பை மதித்து நடப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications