நீதிபதிகள் போனை ஒட்டுக் கேட்பதா? மோடி முன்னிலையில் கேஜ்ரிவால் காட்டம்
நீதிபதிகள் தொலைபேசிகளை மத்திய பாஜக அரசு ஒட்டுக்கேட்பதாக பிரதமர் மோடி முன்னிலையில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி: மத்திய பாஜக அரசால் நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி முன்னிலையிலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் பொன்விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர், மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியதாவது:
மத்திய அரசால் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்பது நீதிபதிகள் புகார். இது பெரும் கவலை தரக் கூடியது.
இப்படி ஒட்டுக்கேட்பதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான அத்துமீறிய தாக்குதல்.
நீதிபதிகள் நியமனங்கள் தொடர்பான பரிந்துரைகள் 9 மாதங்களாக மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இப்படி காலம் தாழ்த்துவது சரியானது அல்ல...இதனால் அரசு மற்றும் நீதித்துறை இடையேயான இடைவெளி அதிகரித்துவிடும்.
இவ்வாறு பிரதமர் மோடி முன்னிலையிலேயே கேஜ்ரிவால் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications