ஜனவரி 3-ம் தேதிக்குள் ஆம் ஆத்மி தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்: ஆளுநர் உத்தரவு
டெல்லி: வரும் சனிக்கிழமையன்று டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜனவரி 3ம் தேதிக்குள் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 28 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க, 8 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறது. இதையடுத்து ஆளுநரை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால், ஆட்சியமைக்க அழைக்கும்படி உரிமை கோரினார்.

இதுபற்றி ஆளுநர் அளித்த பரிந்துரையை அடுத்து குடியரசுத்தலைவர் சம்மதம் தெரிவித்தார். டெல்லியில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க தாமதமானதால், நாளை நடைபெறுவதாக இருந்த கெஜ்ரிவாலின் பதவியேற்பு, வரும் 28-ம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டது. அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.
கெஜ்ரிவாலின் பதவியேற்புக்குப் பின்னர் வரும் ஜனவரி 1-ம் தேதி சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில், பதவியேற்ற 7 நாட்களுக்குள் கெஜ்ரிவால் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கேட்க வேண்டும் என்ற குடியரசுத்தலைவரின் உத்தரவுப் படி, ஆளுநர் நஜீப் ஜங் வரும் ஜனவரி 3-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆம் ஆத்மி கட்சியிடம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications