நாளை மோடியைச் சந்திக்கிறார் கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் வருங்கால முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து தன்னுடைய பதவியேற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு விடுக்க உள்ளார்.
மேலும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் அவர் சந்திக்க உள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்று அமோகமாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

தன்னுடைய பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும், மரியாதை நிமித்தமாகவும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்க அனுமதி கோரியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாளை பிரதமரை சந்திக்கின்றார் கெஜ்ரிவால்.
தேர்தல் பிரசாரத்தின்போது முதுகில் குத்தியவர் கெஜ்ரிவால் என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் மோடி. மேலும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டபோது எதிர்த்துப் போட்டியிட்ட கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் பாஜகவை படு தோல்வி அடையச் செய்துள்ள கெஜ்ரிவாலும், அவரை கடுமையாக விமர்சித்த மோடியும் நாளை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சட்டசபை கட்சி தலைவர் மற்றும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. அதன்படி, துப்பாக்கி ஏந்திய டெல்லி போலீஸ் கமாண்டோக்கள் 12 பேர் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications