லத்தூரின் வறட்சியைத் தீர்க்க “தண்ணீர் ரயில்” - பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பாராட்டு
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் லத்தூருக்கு வறட்சியைத் தீர்க்க தண்ணீர் நிரம்பிய ரயில்களை அனுப்பி முயன்று வருகின்றார் பிரதமர் நரேந்திர மோடி என்று புகழ்ந்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
இது பற்றி அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "அடுத்த 2 மாதங்களுக்கு நாள் ஒன்றிற்கு 10 லட்சம் லிட்டர் நீரை லத்தூர் நகருக்கு அனுப்பிட டெல்லி தயாராக உள்ளது. நீரை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதியை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும்.
தண்ணீர் பற்றாக்குறை நெருக்கடியில் லத்தூர் சிக்கி உள்ளது. அங்கு ரயில் வழியே நீரை கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. இந்தியாவில் 21 ஆம் நூற்றாண்டில் தண்ணீர் பற்றாக்குறையினால் ஒருவர் மரணமடைந்து விட்டால் அது நாடு முழுவதும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.
லத்தூர் மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது நாடு முழுவதுதற்குமுள்ள பொறுப்பு. டெல்லியிலும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. ஆனால் லத்தூர் நகரின் மோசமிக்க நிலையை கருத்தில் கொள்ளும்பொழுது, அங்குள்ள மக்களுக்கு உதவ வேண்டியது நமது பொறுப்பு.
இது குறித்து பிற மாநில முதல்வர்களிடம் உங்களுக்கு சரியென தோன்றினால் உதவி கேட்கலாம். அவர்களும் உதவி கரம் நீட்டுவார்கள் என நான் உறுதியாக கூறுகிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்.