குஜராத்தில் கெஜ்ரிவால் கைதாகி விடுதலை- டெல்லியில் பாஜக அலுவலகத்தை தாக்கிய ஆஆ தொண்டர்கள்
அகமதாபாத்: குஜராத்தை முன்னோடி மாநிலமாக ஆக்கிவிட்டதாக அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான மோடி கூறி வருவது உண்மையா என்பதை பார்க்க ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சென்றார். சென்ற இடத்தில் அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
குஜராத்தை முன்னோடி மாநிலமாக்கியுள்ளதாக அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறி வருகிறார். இந்நிலையில் அவர் கூறுவது எல்லாம் உண்மை தானா என்பதை கண்டறிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று குஜராத் சென்றார்.

அகமதாபாத்தை அடைந்த கெஜ்ரிவால் தனது சுற்றுப்பயணத்தின் இறுதிநாள் அன்று பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார். ஆம் ஆத்மி கட்சி துவங்கிய பிறகு முதன் முறையாக குஜராத் வந்துள்ள கெஜ்ரிவால் மாநிலம் முழுக்க சுற்றிப் பார்க்க உள்ளார்.
இந்நிலையில் கெஜ்ரிவால் மெஹ்சனா மாவட்டம் பெசராஜியில் இருந்து ரதன்பூருக்கு செல்லும் வழியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் ரதன்பூரில் பிரச்சாரம் செய்ய போலீசார் அனுமதி அளிக்கவில்லையாம். அனுமதியை மீறிச் சென்றதால் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ரதன்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர் விசாரணைக்கு பிறகு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டார். லோக்சபா தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அவற்றை மீறியதாக கெஜ்ரிவால் மீது குற்றம்சாட்டப்பட்டது.
தேர்தல் ஆணையமே இன்று காலை 10.30 மணிக்கு மேல் தான் தேர்தல் தேதியை அறிவித்தது. அது தேர்தல் தேதியை அறிவித்த சூட்டோடு கெஜ்ரிவால் தேர்தல் விதிகளை மீறியதாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் கூறுகையில்,
நான் குஜராத் வந்ததில் மோடி ஆடிப்போய்விட்டார். அதனால் தான் என்னை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மோடி விவசாயிகள் மற்றும் பாமர மக்களுக்கு எதிரானவர். குஜராத்தில் அதானி மற்றும் அம்பானிகளுக்கான முன்னேற்றம் மட்டுமே உள்ளது. நான் கைது செய்யப்படப்போவது அவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றார்.
இந்நிலையில் கெஜ்ரிவாலை கைது செய்யவில்லை என்றும், தேர்தல் அதிகாரிகள் அவரை விசாரித்ததாகவும் பாஜக சார்பில் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை கண்டித்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் பாஜகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். உடனே போலீசார் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications