காங்.கை உடைக்க குதிரைப் பேரம் நடத்தினாரா கெஜ்ரிவால்- பரபரப்பைக் கிளப்பும் ஆடியோ!
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரை தங்கள் வசம் இழுப்பதற்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால் பேரம் பேசியது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக ஆம் ஆத்மி கட்சியில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. கெஜ்ரிவால் தன்னிச்சையாக செயல்படுவதாக அவர் மீது மூத்த தலைவர்கள் பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோர் குற்றம் சாட்டினர். அதனைத் தொடர்ந்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கெஜ்ரிவால் இரண்டு முறை கடிதம் கொடுத்தார். ஆனால், அவரது கடிதம் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

அதனைத் தொடர்ந்து, தற்போது தனது இருமலுக்கு சிகிச்சைப் பெறுவதற்காக கெஜ்ரிவால் பெங்களூருவில் தங்கி உள்ளார். இந்நிலையில், டெல்லி சட்டசபைத் தேர்தல் சமயத்தில் அவர் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
டெல்லி சட்டசபைத் தேர்தல் சமயம் வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பொருட்களைக் கொடுத்து முறைகேடுகளில் ஈடுபடும் எதிர்க்கட்சியினரை வீடியோ எடுத்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பும் படி கெஜ்ரிவால் தனது கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், காங்கிரசை உடைக்க கெஜ்ரிவால் குதிரை பேரம் பேசியது போன்ற ஆடியோ ஒன்றை, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேஷ் கார்க் வெளியிட்டுள்ளார். ராஜேஷ் தற்போது காங்கிரஸில் உள்ளார். தேர்தலுக்கு முன் தன்னுடன் கெஜ்ரிவால் பேசிய ஆடியோ பதிவு இது என ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
அந்த ஆடியோவில், ராஜேஷ் கார்க்கும், கெஜ்ரிவாலும் பேசிக் கொள்வது போல் உரையாடல் அமைந்துள்ளது. அதில், ‘காங்கிரஸ் எங்களுக்கு ஆதரவு அளிக்காது. அவர்களின் ஆதரவை பெற ஒன்றரை மாதங்களாக நாங்கள் பெரிதும் முயற்சித்து விட்டோம். அதன் ஒரு கட்டமாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.,க்கள் நம் பக்கம் இழுப்பதுடன், அக்கட்சியை உடைக்க வேண்டும்' என கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
ஆம் ஆத்மி மறுப்பு:
இந்த ஆடியோ பதிவில் கெஜ்ரிவாலுடன் பேசியது தான் தான் என ராஜேஷ் கார்க் ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஆனால் இது முற்றிலும் பொய்யானது எனவும், இந்த ஆடியோ சித்தரிக்கப்பட்ட ஒன்று என ஆம் ஆத்மி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மகா. ஆம் ஆத்மி தலைவர் விலகல்:
கெஜ்ரிவாலின் இந்த ஆடியோ வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆம்ஆத்மி தலைவர் அஞ்சலி தமானியா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘டெல்லி முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதால் கட்சியில் இருந்து விலகுகிறேன். கொள்கைக்காகவே கெஜ்ரிவாலை ஆதரித்தேன், குதிரை பேரத்திற்காக அல்ல. தற்போது நடைபெற்று வரும் முட்டாள் தனமான செயல்களுக்காக கட்சியில் நான் சேரவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications