ஜன்லோக்பால் மசோதா: இன்று பதவியை ராஜினாமா செய்வாரா கெஜ்ரிவால்?
டெல்லி: ஜன்லோக்பால் மசோதா நிறைவேறுவதாக தெரியவில்லை. இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை இன்று ராஜினாமா செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஊழலுக்கு எதிரான ஜன்லோக்பால் மசோதாவை டெல்லியில் பிப்ரவரி 13ம் தேதிக்குள் அதாவது இன்றைக்குள் நிறைவேற்றாவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லி சட்டசபையில் ஜன்லோக்பால் மசோதாவை கொண்டு வரும் முன்பு மாநில அரசு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
இதனால் இன்று டெல்லி சட்டசபையில் ஜன்லோக்பால் மசோதாவை கொண்டு வர முடியாது. முன்னதாக இன்று சட்டசபையில் மசோதாவை அறிமுகப்படுத்தி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரப் போவதாக கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். கெஜ்ரிவால் மத்திய அரசிடம் அனுமதி பெறாமலேயே சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றுவார் என்று ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இன்று மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதால் கெஜ்ரிவால் இன்றே தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.