ஸ்டாலினிடம் ஆங்கிலம் அல்லது உருது மொழியில் பேச சொல்வீர்களா? பிரஸ்மீட்டில் டென்ஷனான மெஹபூபா முஃப்தி
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தனது தாய்மொழியான காஷ்மீரி மொழியில் பேச தொடங்கினார். அப்போது பத்திரிகையாளர் உருது மொழியில் பேசும்படி கூறியதால் அவர் கடும் கோபமடைந்தார். இந்த வேளையில், ‛‛ஸ்டாலினிடம் ஆங்கிலம் அல்லது உருது மொழியில் பேச சொல்வீர்களா?'' என கேள்வி கேட்டு பத்திரிகையாளரை கடிந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி. இவர் மக்கள் ஜனநாயக கட்சியின்( People's Democratic Party or PDP) தலைவராக உள்ளார். இந்நிலையில் தான் நேற்று மெஹபூபா முஃப்தி தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் காஷ்மீரி மொழியில் பேசினார். இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛காஷ்மீரி மொழியில் பேசாதீர்கள்.. உருது மொழியில் பேசுங்கள்'' என்று கூறினார். இதனால் மெஹபூபா முஃப்தி கடும் கோபமடைந்தார்.
அப்போது, ‛‛"உங்களுக்கு மொழிபெயர்ப்பு வேண்டுமா? ஏன்? நீங்களே மொழிபெயர்த்து கொள்ளலாமே.. ஸ்டாலினை (தமிழக முதல்வர்) ஆங்கிலத்தில் அல்லது உருதுவில் பேச சொல்வீர்களா?" என்று சீறினார். முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து பிரஸ்மீட்டுகளிலும் தமிழ் மொழியில் மட்டுமே பேசுவார். பிற மாநில தேர்தல் பிரசாரங்களிலும் கூட தமிழில் தான் உரையாற்றுவார்.
ஆங்கிலம் உள்பட பிற மொழிகளில் பேசமாட்டார். இந்நிலையில் தான் தான் காஷ்மீரை சேர்ந்த நான் காஷ்மீரி மொழியில் தான் பேசுவேன். உருது மொழி பேசமாட்டேன் என்று மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார்.
மேலும் மெஹபூபா முஃப்தி கூறுகையில், ‛‛காஷ்மீரி பத்திரிகையாளர்கள் தங்கள் தாய் மொழிக்கு கொஞ்சம் மரியாதை வழங்க வேண்டும். இப்போது மிஞ்சியிருப்பது இது ஒன்றுதான். எனவே காஷ்மீரி மொழிக்குச் சற்றே மரியாதை கொடுங்கள்'' என்று கூறிய மெஹபூபா முஃப்தி தொடர்ந்து தனது தாய் மொழியான காஷ்மீரி மொழியில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மேலும் வங்கதேசத்தில் நடக்கும் வன்முறையில் இந்தியர்கள் 2 பேர் கொல்லப்பட்டது பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மெஹபூபா முஃப்தி,‛‛வங்கதேசத்தில் சகிப்புத்தன்மை என்பது குறைந்துவிட்டது. கும்பலாக சென்று ஒருவரை அடித்து கொல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
வங்கதேசத்தில் நடக்கும் தற்போதைய சம்பவங்கள் எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் இப்போது வங்கதேசத்தில் கும்பல் படுகொலை நடப்பதை கண்டிக்கும் நபர்கள் அதுபோன்ற சம்பவங்கள் இங்கு நடந்தபோது மவுனமாக இருந்தனர்.
ஜம்மு காஷ்மீர் அரசு சார்பில் நாடு முழுவதும் வாழும் ஜம்மு காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அரசு சார்பில் அமைச்சர்கள் குழுவை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பாக உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா மாநிலங்களுக்கு அமைச்சர்கள் குழு செல்ல வேண்டும். அங்கு தான் காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது'' என்று கூறினார்.
சமீபத்தில் உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரேதசம், ஹரியானா மாநிலங்களில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மெஹபூபா முஃப்தி இதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications