எனக்கு ஓட்டு போடாதீங்க.. தேர்தலுக்கு முன் போட்டியில் விலகிய காங்கிரஸ் வேட்பாளர்! பின்னணியில் பாஜக?
கவுஹாத்தி: அசாமில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் போட்டியில் இருந்து விலகுவதாகவும், தேர்தலில் தனக்கு யாரும் ஓட்டளிக்க வேண்டாம் என்றும் கூறி உள்ளது. இந்த முடிவுக்கு காங்கிரஸ் மேலிடம் தான் காரணம் என அவர் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில் என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக அசாம் உள்ளது. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சி தான் நடந்து வருகிறது. தற்போது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வராக உள்ளார். இங்கு மொத்தம் 126 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு மொத்தம் 64 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

அசாமில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் விலகல்
அசாமில் பாஜக தலைமையிலான கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் போராடி வருகிறது. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய நாளான நேற்று காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கட்சியில் இருந்து விலகுவதாகவும், தேர்தலில் தனக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
அந்த வேட்பாளரின் பெயர் சுரன் டைமாரி. இவர் அசாம் மாநிலத்தில் உள்ள உடல்குரி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு வயது 71. தேர்தல் இன்று நடக்கும் நிலையில் இவர் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
யாரும் ஓட்டளிக்க வேண்டாம்
இதுபற்றி சுரன் டைமாரி கூறுகையில், ''தேர்தலில் காங்கிரஸ் தலைமையிடம் இருந்து எனக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. காங்கிரஸ் எனக்கு துரோகம் இழைத்துவிட்டது. என்னை ஏமாற்றிவிட்டார்கள். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபிறகு பலமுறை மேலிட தலைவர்களை தொடர்பு கொள்ள முயன்றேன். அவர்கள் என்னை கண்டுக்கொள்ளவில்லை. எனக்கு சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் தேர்தலில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுகிறேன். எனக்கு யாரும் ஓட்டளிக்க வேண்டாம்'' என்று கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் சொல்வது என்ன?
இதற்கிடையே தான் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்த வேட்பாளர் சுரன் டைமாரியின் செயலுக்கு பின்னால் பாஜக உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தீப் பாயன் கூறுகையில், ''வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக தான் இந்த சம்பவத்தை பார்க்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் பாஜக தலைமையிலான அரசு மக்களின் ஆதரவை இழந்துவிட்டது. மாநிலத்தில் அரசியல் சூழல் மாறி வருகிறது. இதனை முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா நன்று அறிவார். இதன் காரணமாகவே, காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை சாராத வேட்பாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்று கூறியுள்ளார்.
பாஜக கூட்டணிக்கு சாதகம்
உடல்குரி சட்டசபை தேர்தலில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் வேட்பாளர் சுரன் டைமாரி அறிவித்துள்ளது பாஜகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பாஜக கூட்டணியில் உள்ள யுபிபிஎல் கட்சியின் வேட்பாளர் தீபன் பாரோ இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது இந்த தொகுதியில் யுபிபிஎல் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏவாக கோபிந்த சந்திரா உள்ளார். இவருக்கு பதில் தீபன் பாரோ களமிறங்கி உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சுரன் டைமாரி விலகல் என்பது பாஜக கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications