யோனிதான் தெய்வம்.. அம்மனின் மாதவிடாய் காலமே திருவிழா.. அஸ்ஸாம் காமாக்யா கோவிலில் குவியும் பக்தர்கள்!
குவஹாத்தி: அஸ்ஸாம் உள்ளிட்ட கிழக்கு, வடக்கு மாநிலங்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான அஸ்ஸாம் காமாக்யா கோவில் அம்புபாச்சி மேளாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். அஸ்ஸாம் காமாக்யா கோவில் அம்புபாச்சி திருவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமல்ல கிழக்கு மாநில மக்களுக்கும் குவஹாத்தி அருகே உள்ள காமாக்யா கோவில் அம்புபாச்சி மேளா அதி முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும் பழனி மலைக்கு பங்குனி உத்திரத்துக்கு யாத்திரை செல்வது போல காமாக்யா கோவிலுக்கு ஆண்டுதோறும் அம்புபாச்சி திருவிழாவுக்கு செல்வதை வாழ்நாள் கடமையாகவே கொண்டுள்ளனர் இந்த மக்கள்.

ஆம்.. இதுதான் வடகிழக்கு மாநிலங்களின் கும்பமேளா.. வட இந்திய மாநிலங்களில் கும்பமேளா எப்படி வெகுவிமர்சியையாக கொண்டாடப்படுகிறதோ அதேபோல வடகிழக்கு மாநிலங்களின் கும்பமேளாவாக அம்புபாச்சி மேளா கொண்டாடப்படுகிறது.
அப்படி என்ன விசேஷம் இந்த காமாக்யா கோவிலில் என்கிறீர்களா? இது எங்கே இருக்கிறது?
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் மலைகுன்றில் இருக்கிறது காமாக்யா கோவில். இங்கு அம்மனின் "யோனிதான் திரு உருவமாக வணங்கப்படுகிறது. இயற்கை நீருற்றுடனான யோனி வடிவ சிலையே தெய்வமாக போற்றப்படுகிறது.
அம்புபாச்சி மேளா என்பது அம்மனின் மாதவிடாய் சுழற்சி காலத்தை குறிப்பிடுகிறதாம். ஆண்டுக்கு ஒரு முறை அம்மன் மாதவிடாய் சுழற்சி காலத்தை கடக்கிற 3 நாட்களும் கோவில் நடை சாத்தப்பட்டே இருக்கும். ஆனாலும் இந்த 3 நாட்களும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடகிழக்கு இந்தியா முழுவதும் இருந்து காமாக்யா கோவிலிலேயே தவமாய் தவமிருந்து காத்திருப்பர்.
அம்மனின் மாதவிடாய் சுழற்சி கால முடிவடைந்த பின்னர் - 3 நாட்களுக்குப் பின்னர் நடைபெறும் கோவில் சிறப்பு பூஜைகளில் பங்கேற்பதற்காகதான் இத்தனை தவமிருப்பார்களாம் பக்தர்கள். மாதவிடாய் சுழற்சிக்குப் பிந்தைய அம்மனின் பூஜைகளில் பங்கேற்பது நற்பலன்களைத் தரும் என்பது காமாக்யா தாயாரின் பிள்ளைகளின் நம்பிக்கை.
வட இந்திய கும்பமேளா காலங்களில் திடீரென பல்லாயிரக்கணக்கான நிர்வாண சாமியார்கள் எப்படி ஒன்று திரள்வார்களோ அதேபோல அம்புபாச்சி மேளா காலங்களில் மாந்திரீக/ தந்திரங்களில் உச்சம் பெற்ற பாபாக்கள் காமாக்யா கோவிலில் வலம் வருவர். இதன் பின்னர் மலைக்குன்றுகளில் தவமிருக்கப் போய்விடுவார்களாம் இந்த தாந்திரீக பாபாக்கள். இவர்களை சந்தித்து பில்லி சூனியம் செய்வினை கட்டிப் போடுதலுக்கு எனவும் ஆயிரக்கணக்கானோர் வந்து குவிகின்றனராம்.. அதுவும் வடகிழக்கு மாநில அரசியல்வாதிகள் இதற்காக ஏராளமாக வருவதும் வழக்கமாம்.
#WATCH | Assam: A large number of devotees from across the country arrive at Kamakhya temple in Guwahati as the annual Ambubachi Mela begins here today.
— ANI (@ANI) June 22, 2024
After Ambubachi Mela's Pravritti, the main door of the temple will be closed for three days. The Ambubachi Mela's Nivritti… pic.twitter.com/YdpLkUn7XU
இந்த ஆண்டு காமாக்யா கோவிலின் அம்புபாச்சி மேளா திருவிழா இன்று தொடங்கி உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கோவில் நடை மூடப்பட்டிருந்தாலும் பக்தர்கள் அங்கேயே தங்கி தவமிருப்பர். காமாக்யா கோவிலில் ஒரு காலத்தில் பன்றிகளே 'பலி' கொடுக்கப்பட்டன. இப்போது ஆடுகள் பலி விலங்காக உருமாறி இருக்கின்றன.
ஜூன் 25-ந் தேதி இரவு 9.08 மணிக்கு காமாக்யா கோவில் அதாவது அம்மனின் மாதவிடாய் சுழற்சி முடிவுக்குப் பின்னர் திறக்கப்படும். அப்போது யோனி வடிவிலான அம்மனை தரிசிப்பது புண்ணியம் என்பதற்காகவே இப்போதிருந்தே குவிந்து கொண்டே இருக்கிறது பக்தர்கள் பெருங்கூட்டம்!












Click it and Unblock the Notifications