Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6 போலீசார் மரணத்துக்கு பழி-நெடுஞ்சாலையை மறித்த அஸ்ஸாம்-பொருட்கள், மருந்துகள் இல்லாமல் மிசோரமில் அவதி

Subscribe to Oneindia Tamil

அய்சால்: 6 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் மிசோரம் செல்லும் நெடுஞ்சாலையை அஸ்ஸாம் மக்கள் மறித்துள்ளனர். இதனால் மிசோரம் மாநிலத்தில் அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக எல்லை மறுவரையறைகளை மத்திய பாஜக அரசு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்

அஸ்ஸாம்- மிசோரம் இடையேயான எல்லை மோதலில் உச்சகட்டமாக கடந்த மாதம் 26-ந் தேதி இரு மாநில போலீசாருக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 6 அஸ்ஸாம் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியாவில் இரு மாநில போலீசார் பரஸ்பரம் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டது இதுவே முதல் முறை.

இதனால் கொந்தளித்துப் போன அஸ்ஸாம் மக்கள், மிசோரம் மாநிலத்துக்கு செல்லக் கூடிய நெடுஞ்சாலையை (NH 306) மறித்துள்ளனர். இதனால் மிசோரம் செல்லக் கூடிய அனைத்து வாகனங்களும் அஸ்ஸாம் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை மிசோரம் மீது அஸ்ஸாம் மக்கள் விதித்துள்ளனர்.

 பட்டினி கிடக்கட்டும்

பட்டினி கிடக்கட்டும்

இது தொடர்பாக பேசும் அஸ்ஸாமியர்கள், எங்கள் போலீசார் 6 பேரை படுகொலை செய்துள்ளனர். இதற்கு தக்க பாடம் புகட்டத்தான் நெடுஞ்சாலை மறித்திருக்கிறோம். எங்கள் போலீசாரை கொலை செய்த மிசோரம் மக்கள் பட்டினி கிடந்து உயிரிழந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என்கின்றனர். இதே கருத்தை அஸ்ஸாம் பாஜக எம்.எல்.ஏ. கவுசிக் ராய் பேசியது பெரும் சர்ச்சையானது.

 மிசோரமில் தட்டுப்பாடு

மிசோரமில் தட்டுப்பாடு

அஸ்ஸாம் மக்கள் நெடுஞ்சாலையை மறித்திருப்பதால் மிசோரமில் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் திரிபுரா, மணிப்பூர் மாநிலங்கள் வழியாகத்தான் மிசோரமுக்கு பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இந்த சாலைகள் படுமோசமானவை என்பதால் சரக்கு வாகனங்கள் செல்வதில் சிக்கல் இருக்கிறது. இது மிசோரமில் நிலைமை மேலும் மோசமாக்கி உள்ளது. தற்போதே மிசோரமில் அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் விலை மிக கடுமையாக உயர்ந்துவிட்டன. இதே நிலைமை நீடித்தால் நிச்சயம் பட்டினி சாவுகள் ஏற்படும் என்கின்றனர் மிசோரம் மக்கள். ஆகையால் மத்திய அரசு தலையிட்டு உடனே தீர்வு காண வேண்டும் என்கிறது மிசோரம் அரசு.

 மிசோரம் மக்கள் மிரட்டல்

மிசோரம் மக்கள் மிரட்டல்

இன்னொரு பக்கம், மத்திய அரசு, அஸ்ஸாமின் அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை நீக்காவிட்டால் நாங்கள் வங்கதேசம் மற்றும் மியான்மரின் உதவியைத்தான் நாட வேண்டும்; அங்கிருந்து பொருட்களை வரவழைக்கவும் நேரிடும் எனவும் சில மிசோரம் அமைப்புகள் மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கின்றன. மிசோரமுடன் எப்போது எல்லை மோதல்கள் ஏற்பட்டாலும் உடனே நெடுஞ்சாலையை மறித்துவிடுகிறது அஸ்ஸாம். கடந்த ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி முதல் நவம்பர் 11-ந் தேதி வரை சுமார் ஒரு மாத காலம் மிசோரம் நெடுஞ்சாலையை அஸ்ஸாம் மறித்தது. அப்போதும் இதேபோல் நெருக்கடியை மிசோரம் எதிர்கொண்டது.

 சரக்கு வாகனங்கள்

சரக்கு வாகனங்கள்

இது தொடர்பாக மிசோரம் எல்லை கிராமமான வைரங்டேவைச் சேர்ந்த சன்னா என்பவர் கூறுகையில், இந்த நெடுஞ்சாலைதான் எங்களது வாழ்வாதாரம் என்பதை அஸ்ஸாம் மக்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். அதனால்தான் ஒவ்வொருமுறை பிரச்சனை வரும்போதும் அத்தியாவசியப் பொருட்களை தடுத்து மறிக்கின்றனர். ஒரு சகநாட்டு குடிமக்களிடம் இதேபோல் அஸ்ஸாம் மக்கள் நடந்து கொள்ளலாமா? எங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்பதுதான் அஸ்ஸாமியர்கள் சிந்தனை என கொந்தளிக்கிறார். அஸ்ஸாம் மக்கள் நெடுஞ்சாலையை மறித்திருப்பதால் இன்னொரு பெரும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்துக்கு செல்ல வேண்டிய சரக்கு லாரிகள் பல கி.மீ. தொலைவுக்கு அணி வகுத்து நிற்கின்றன. தமிழகம், ஆந்திரா என பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சென்ற லாரிகள் திரும்ப முடியாமல் தவிக்கின்றன. அந்த லாரிகளின் ஓட்டுநர்கள் நடுசாலையிலேயே சமைத்து அங்கேயே உறங்குகின்றனர். தங்களின் கையிருப்பு பணமும் கரைந்து போன நிலையில் என்ன செய்வது என தெரியாமல் அந்த சரக்கு வாகன ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர்.

 எல்லை மறுவரையறை

எல்லை மறுவரையறை

இதனால் இரு மாநிலங்களுடன் மத்திய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என்பது கோரிக்கை. மேலும் இரு மாநில எல்லைகள் தொடர்பான மறுவரையறைகளை உடனே மேற்கொண்டால்தான் எதிர்காலத்தில் இத்தகைய மோதல்களைத் தவிர்க்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். தற்போதைய எல்லைகள் 1875, 1933-ம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வரையறுக்கப்பட்டவை. அஸ்ஸாம் மாநில அரசு 1933-ம் ஆண்டு எல்லை வரையறைதான் தேவை என்கிறது; ஆனால் மிசோரம் மக்களோ 1875-ம் ஆண்டு எல்லை வரையறைதான் சரி; அதுதான் எங்களது முன்னோர்களிடம் ஆலோசித்து உருவாக்கப்பட்டது என்கிறது. இதுதான் அஸ்ஸாம்- மிசோரம் எல்லை பிரச்சனையின் மையம். இந்த இரு வரையறைகள் தொடர்பாக வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தை மத்திய பாஜக அரசு கூட்டி ஆலோசிக்க வேண்டும். அனைத்து தரப்பும் ஏற்கக் கூடிய வகையிலான சுமூக எல்லை மறுவரையறைகள் மட்டும்தான் இந்த பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள். ஏனெனில் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்துதான் இதர வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் பிரிந்தன. வடகிழக்கு மாநிலங்களில் தொடக்கத்தில் யூனியன் பிரதேசங்களாகவும் பின்னர் மாநில அந்தஸ்து கொண்டவையாகவும் உருவாக்கப்பட்டன. தற்போது வடகிழக்கு மாநிலங்களில் வலுவாக காலூன்ற விரும்புகிற பாஜக, இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரமான எந்த தரப்பும் பாதிக்காத வகையிலான தீர்வு ஒன்றைக் காண வேண்டிய நெருக்கடிக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+