Assam Flood: அசாமில் வரலாறு காணாத மழை.. 4 லட்சம் மக்கள் பாதிப்பு.. 19 மாவட்டங்களில் வெள்ளம்
கௌஹாத்தி: அசாம் மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 29-ஆம் தேதி முதல் அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 19 மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இந்த கனமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4 லட்சம் பேர் கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சார் மாவட்டம் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 1.03 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
சுமார் 10,000-க்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், அரசின் உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது.

132 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக மழை
அசாம் மாநிலத்தின் பெரிய நகரமான சில்ச்சார் நகரில் 24 மணி நேரத்தில் 415.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 1893-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழை அளவாகும். கிட்டத்தட்ட 132 வருடங்களுக்குப் பிறகு இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வரலாறு காணாத மழையினால் அசாம் மாநில மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications