அஸ்ஸாமில் போடோ தீவிரவாதிகள் தாக்குதல், வன்முறையில் உயிரிழப்பு 75 ஆக அதிகரிப்பு
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மற்றும் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.
அஸ்ஸாமில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது. இதில் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாத ஒரு பிரிவினர் சாங்பிஜித் என்பவர் தலைமையில் என்.டி.எப்.பி(எஸ்) என்ற பெயரில் தனியாக செயல்படுகின்றனர்.
இம்மாநிலத்தில் அண்மைக் காலமாக தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், சோனித்பூர், கோக்ரஜார், சிராங் ஆகிய மாவட்டங்களில் 5 கிராமங்களில் ஆதிவாசியினர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
இதில் சோனித்பூர் மாவட்டத்தில் 39 பேரும், கோக்ரஜார் மாவட்டத்தில் 25 பேரும் உயிரிழந்தனர். சிராங் மாவட்டத்தில் 3 பேர் பலியாகினர்.
இதனிடையே இந்தத் தாக்குதலால் ஆத்திரமுற்ற ஆதிவாசிமக்கள், சோனித்பூர் மாவட்டத்தின் புலோகுரின் பகுதியில் போடோ இனத்தவர்களுக்கு சொந்தமான 20 வீடுகளுக்கு தீவைத்தனர். மேலும் வில், அம்பு ஏந்தி ஆயிரக்கணக்கான தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தினர்.
மேலும் சோனித்பூர் மாவட்டம் தெகியாஜுலி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து வில், அம்புடன் பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் தெகியாஜுலி காவல் நிலையத்தை தாக்க முயன்றனர். இவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
அஸ்ஸாமில் கடந்த சில நாட்களாக நிகழ்ந்த தாக்குதல் மற்றும் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.