அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் 2–வது கட்ட வாக்குப் பதிவு- நாளை பிரசாரம் ஓய்கிறது!
குவஹாத்தி/ கொல்கத்தா: அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் 2-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. அம்மாநிலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, புதுவை, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மே 16-ந் தேதி ஒரே நாளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

அஸ்ஸாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 2 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 65 தொகுதிகளுக்கு கடந்த 4-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 78% வாக்குகள் பதிவாகி இருந்தது.
எஞ்சிய 61 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக வரும் 11-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
மே. வங்கம்....
மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் காரணமாக 294 தொகுதிகளுக்கு 6 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு கடந்த 4-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அத்தேர்தலில் 80% வாக்குகள் பதிவானது.
2-வது கட்டமாக வருகிற 11-ந் தேதி 56 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
இரு மாநிலங்களிலும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications