"இந்தியா" கூட்டணிக்கு அக்னி பரீட்சையாக காத்திருக்கும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் எப்போது?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவில்லை. ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலானது "இந்தியா" கூட்டணி கட்சிகளான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸுக்கு அக்னி பரீட்சையாகவே இருக்கும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் "இந்தியா" கூட்டணி தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. இதனால் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் எப்போது என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கான இடங்கள் 41.

2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள்:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- 30
காங்கிரஸ் 16
பாஜக 25
2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் காங்கிரஸும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. ஜார்க்கண்ட் முதல்வராக முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.
தேசிய அளவில் இந்தியா கூட்டணி உருவான போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் இடம் பெற்றது. இந்த கூட்டணியையும் உடைக்க பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. இதன் ஒரு கட்டமாக நில மோசடி வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதனால் ஹேமந்த் சோரன் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்களை வளைத்து பாஜக புதிய கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கவில்லை. ஹேமந்த் சோரனுக்கு பதில் சாம்பாய் சோரன் முதல்வரானார்.

பின்னர் ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலையாகி மீண்டும் முதல்வரானார். சட்டசபையில் மீண்டும் பெரும்பான்மையையும் நிரூபித்தார். தற்போதைய நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் காங்கிரஸும் வலிமையாகவே உள்ளன. இந்த மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகதான் பெரிய கட்சி. ஆனால் இந்த முறை பீகாரின் ஐக்கிய ஜனதா தளமும் 11 இடங்களில் போட்டியிடுவோம் என அறிவித்திருப்பதால் அந்த கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படவில்லை. இதனால் ஜார்க்கண்ட் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலானது "இந்தியா" கூட்டணிக்காக அக்னி பரீட்சையாக இருக்கும் என்பதால் மீண்டும் வெல்வதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் காங்கிரஸும் முனைப்புடன் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications