திரிபுரா தேர்தலில் மும்முனைப் போட்டி- பாஜக ஆட்சியை தக்க வைக்க இடைவிடாது படையெடுக்கும் அமித்ஷா!
திரிபுராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள தீவிரம் காட்டுகிறது. திரிபுரா தேர்தல் பிரசாரத்துக்காக 2-வது முறையாக இன்று வருகை தருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா சட்டசபைக்கு வரும் 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு நாள் நெருங்கி விட்ட நிலையில் அம்மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் படுதீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.
திரிபுராவில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணி மற்றும் அகன்ற திப்ரலாந்து தனி மாநில கோரிக்கையை (திரிபுரா பழங்குடிகளை மட்டும் கொண்ட தனி மாநிலம்) முன்வைக்கும் திப்ரா மோதா தலைமையிலான கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

25 ஆண்டுகால இடதுசாரிகள் ஆட்சியை வீழ்த்தி, காங்கிரஸை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்து திரிபுராவில் கால் பதித்தது பாஜக. இன்னமும் உட்கட்சி மோதல் ஓயாமல் அக்கப் போர் நிலவுகிறது. இதனை எல்லாம் தாண்டி ஆட்சியைத் தக்க வைக்க போராடுகிறது பாஜக. ஏற்கனவே திரிபுராவில் 2 ரத யாத்திரைகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இந்த நிலையில் இன்று மீண்டும் திரிபுராவில் பிரசாரம் செய்கிறார் அமித்ஷா. மேலும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் திரிபுராவில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.
திரிபுரா தேர்தலில் அகன்ற திப்ரலாந்து கோரிக்கை பிரதான இடம் பிடித்துள்ளது. ஆனால் பாஜகவோ, திரிபுரா பழங்குடி மக்களையும் குடியேறிய பிற மாநிலத்தவரையும் வேறுபடுத்தக் கூடிய இந்த கோரிக்கையை நிராகரிக்கிறது. ஆனால் நீண்டகால திப்ரலாந்து கோரிக்கைதான் திரிபுரா தேர்தலில் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

திரிபுராவில் ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்தவை இடதுசாரிகளும் காங்கிரஸும். இப்போது இரு துருவங்களும் கூட்டணியாக கை கோர்த்து தொகுதிகளை பங்கீடு செய்து தேர்தலில் களம் காணுகின்றன. இழந்துவிட்ட செல்வாக்கை எப்படியாவது மீட்பதில் இடதுசாரிகள் வாழ்வா? சாவா? என போராடி வருகின்றனர். இதனால் திரிபுரா தேர்தல் களம் தீ பறக்கிறது.












Click it and Unblock the Notifications