கோவா, பஞ்சாப் மாநிலங்களில் பிரச்சாரம் ஓய்ந்தது.. நாளை வாக்குப்பதிவு!
பஞ்சாப் மற்றும் கோவாவில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து அங்கு வாக்குப்பதிவுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
சண்டிகர்: பஞ்சாப், கோவா மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அந்த மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 4ம் தேதி வெளியிட்டது. அதன்படி, 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 11ம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரகாண்ட் சட்டசபைக்கு பிப்ரவரி 15ம் தேதி ஒரே கட்டமாகவும், பஞ்சாப் மற்றும் கோவாவில் பிப்ரவரி 4ம் தேதி ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகவும் ஓட்டுப்பதிவு நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அதன்படி, பஞ்சாப்பில் மொத்தமுள்ள 117 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஒரு கோடியே 92 லட்சத்து 14 ஆயிரத்து 236 பேரும், கோவாவில் 10 லட்சத்து 85 ஆயிரத்து 271 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக பஞ்சாப்பில் 22 ஆயிரத்து 600 ஓட்டுச்சாவடிகளும், கோவாவில் ஆயிரத்து 642 சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பதிவான வாக்குகள் மார்ச் 11ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
கோவாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பஞ்சாபில் அகாலி தளம் -பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு இந்த கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன
பஞ்சாப், கோவாவில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை அடுத்து அந்தந்த மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து அங்கு வாக்குப்பதிவுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications