நான்கு மாநில சட்டசபைத் தேர்தல்: கலக்கப் போவது யாரோ... கணிக்கவே முடியலையே...!
டெல்லி: நான்கு மாநில சட்டசபைத் தேர்தலில் கலக்கப் போவது இந்தக் கட்சிதான் என்று அறுதியிட்டு உறுதியாக கூற முடியாத அளவுக்கு பெரும் குழப்பமாகவே இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். காரணம், தேர்தல் களம் அந்த அளவுக்கு களேபரமாகவே இருக்கிறது.
கணிக்கவே முடியாத அளவுக்கு ஒரு தெளிவின்மையை நான்கு மாநிலத்திலும் பார்க்க முடிகிறது.
கருத்துக் கணிப்புகள் என்னவோ பாஜக பாஜக என்று ஒரே மாதிரியாக சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட பாஜகதான் வெற்றி பெறும் என்றும் உறுதியாகச் சொல்ல முடியாத நிலைதான் உள்ளது. வெட்கத்தை விட்டுச் சொல்ல வேண்டும் என்றால் யார் ஜெயிப்பார்கள் என்பதை எந்தக் கருத்துக் கணிப்பு நிபுணர்களுமே வெளிப்படையாக அடித்துக் கூற முடியவில்லை என்பதுதான்.

சட்டீஸ்கர் நிலவரம்... ரொம்பவே குழப்பம்
இந்தியாவின் மத்திய மாநிலமான சட்டீஸ்கர் ஆரம்பத்தில் காங்கிரஸின் ஆதரவுக் களமாகவே இருந்தது.

2003 முதல் நிலைமை தலைகீழ்
ஆனால் 2003ம் ஆண்டு முதல் நிலைமை மாறியது. பாஜகவின் கோட்டை போல மாறியது சட்டீஸ்கர்.

2 முறை முதல்வர் ரமன் சிங்
பாஜகவின் ரமண் சிங் 2வது முறையாக சட்டீஸ்கர் முதல்வராக இருக்கிறார்.

ஆனால் இப்போது...
ஆனால் தற்போது அங்கு அரசுக்கு எதிரான அலை பெரிதாகவே தற்போது வீசுகிறதாம். குறிப்பாக மத்திய சட்டீஸ்கரில் நிலைமை பாஜகவுக்கு சாதகமாக இல்லை. ரமண் சிங் நல்ல நிர்வாகி என்ற பெயரைப் பெற்றிருந்தபோதும் அவருக்கு எதிரான அலை வீசுவதை பாஜக கவலையுடன் கவனித்து வருகிறது.

கவலை தரும் பஸ்தர் - சர்குஜா
குறிப்பாக எப்போதுமே அதிகமான அளவில் வாக்குகள் பதிவாகும் பஸ்தர், சர்குஜா பகுதிகள்தான் பாஜகவுக்கு கவலையை அதிகரித்துள்ளதாம்.

மத்தியப் பிரதேசத்திலும் குழப்பம்
மத்தியப் பிரதேசத்திலும் குழப்பமான நிலையே காணப்படுகிறது. முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகானுக்கு இங்கு நல்ல பெயர் இருக்கிறது. ஆனால் அவரது அமைச்சர்கள் மகா மோசமானவர்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளனர். கட்சியின் முக்கியமான வேட்பாளர் என்று கருதப்படும் கைலாஷ் விஜயவர்கியாவே கூட இந்த முறை இந்தூரில் வெல்ல மாட்டார் என்கிறார்கள்.

காங்கிரஸிலும் ஒற்றுமையில்லை
அதேசமயம், மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியிலும் ஒரு ஒழுங்கு இல்லை, ஒற்றுமை இல்லை. பிரிந்து கிடக்கிறார்கள். கமல்நாத் கோஷ்டி, திக்விஜய் சிங் கோஷ்டிகள் எப்போதுமே மோதலில்தான் உள்ளன. இது போக சிந்தியா குரூப், சுரேஷ் பச்சோரி குரூப் என தனியாக கோஷ்டிகள் வேறு.

காங். கோஷ்டி மோதல் பாஜகவை கரை சேர்க்குமோ
காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டாலும் கூட அக்கட்சியின் கோஷ்டிப் பூசல்கள், பாஜகவுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி விடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

ராஜஸ்தானிலும் நிலைமை சரியில்லை
ராஜஸ்தானிலும் பிளவுபட்ட நிலையே காணப்படுகிறது. மாநிலம் முழுவதும் காங்கிரஸ், பாஜக ஆகியவை சம பலத்துடன் காணப்படுகின்றன. ராஜஸ்தானில் நரேந்திர மோடி தீவிரப் பிரசாரம் செய்துள்ளார். காங்கிரஸுக்கு எதிரான அலை வீசுவதாக கூறப்படுகிறது. இதனால் பாஜக நம்பிக்கையுடன் உள்ளது. மோடி கூட்டத்துக்கும் நல்ல கூட்டம் வந்ததால் பாஜகவினர் பெருத்த நம்பிக்கையுடன் உள்ளனர்.

கெலாட் தப்புவாரா.. அல்லது வசுந்தராவுக்கு வழி விடுவாரா
அசோக் கெலாட் மீ்து பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்ற போதிலும் வசுந்தர ராஜே சிந்தியா தலைமையிலான பாஜகவினரின் செயல்பாடுகள், பிரசாரம், மோடி வருகை ஆகியவை காங்கிரஸைக் கவலை கொள்ள வைத்துள்ளன.

டெல்லியில் மகா குழப்பம்
ஆம் ஆத்மி கட்சி மட்டும் இருந்திருக்காவிட்டால் டெல்லியில் இவ்வளவு பெரிய குழப்பத்தை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. காரணம், ஆம் ஆத்மி வந்தது முதலே காங்கிரஸுக்கும் சரி, பாஜகவுக்கும் சரி பெரும் குடைச்சலாகியுள்ளது.

ஆம் ஆத்மியை வீழ்த்தத் துடிக்கும் காங்., பாஜக
காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே ஆம் ஆத்மியால் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளன. குறிப்பாக காங்கிரஸ்தான் பெரும் கவலையில் உள்ளது. காரணம், ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸைத்தான் மிகப் பெரிய அளவில் குறி வைத்து களம் இறங்கியுள்ளது.

பாஜகவும் வலுவாக இல்லை
அதேசமயம் பாஜகவும் இங்கு வலுவாக இருப்பது போலத் தெரியவில்லை. இப்போதைய நிலையில் டெல்லியில் யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காது என்பதை எந்தக் கருத்துக் கணிப்பையும் பார்க்காமல் நாமாகவே சொல்லி விடலாம்.
இந்த நான்கு மாநிலங்களிலும் நிலவும் குழப்பங்கள், எந்தக் கட்சி தெளிவான வெற்றி பெறும் என்பதை கோட்டிட்டுக் காட்டத் தவறி வருகின்றன என்பதையே காட்டுகிறது. பார்க்கலாம்.. வாக்காளர்கள் யாரைக் கை காட்டப் போகிறார்கள் என்பதை.












Click it and Unblock the Notifications