சுப்ரீம் கோர்ட்டை விட சட்டசபை தீர்மானமே முக்கியமானதாம்.. அரசை நெருக்கும் கர்நாடக எதிர்க்கட்சிகள்
பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்கு செப்டம்பர் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி வீதம் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்தது கர்நாடக அரசு. மேலும் சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி காவிரி நீர், குடிநீருக்கு மட்டும்தான் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது கர்நாடகா.
அத்துடன் உச்சநீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் புதியதாக ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில் 6,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க கூடாது தமிழக அரசு தரப்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசின் தீர்மானங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை கட்டுப்படுத்தாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தமிழகத்திற்கு 27ந் தேதி முதல் முதல் 3 நாட்களுக்கு வினாடிக்கு தலா 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு, விதானசவுதாவில் கர்நாடக மாநில அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. கடந்தமுறை அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்து கர்நாடக மக்களின் கோபத்திற்கு ஆளான பாஜக இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளது. அக்கட்சியின் மேலவை தலைவர் ஈஸ்வரப்பா கூட்டத்தில் பங்கேற்றார். மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் அக்கட்சி மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் பேசிய மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் முக்கியமானது. சட்டசபை தீர்மானத்திற்கு எதிராக செயல்படுவது முடியாத காரியம் என்று கூறியுள்ளனர். தண்ணீர் திறக்க வேண்டாம் என்றே எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் சேகரித்த கருத்துக்களை மதியம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் வைத்து விவாதித்து அடுத்தகட்ட முடிவை எடுக்க உள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.