6 எம்பி கொண்ட பவார் கட்சி கேட்ட கேள்விகள் 533.. ஆனால் 37 எம்பிக்கள் கொண்ட அதிமுக?.. கொடுமை!
6 எம்பிக்களை கொண்ட சரத் பவாரின் கட்சி லோக்சபாவில் 533 கேள்விகள் கேட்டுள்ளன. ஆனால் 37 எம்பிக்கள் கொண்ட அதிமுகவின் செயல்பாடோ மிகவும் மோசம் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
டெல்லி: லோக்சபாவில் 6 எம்பிக்களை கொண்ட சரத் பவாரின் கட்சி 533 கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் 37 எம்பிக்கள் கொண்ட அதிமுகவோ 300-க்கும் மேற்பட்ட கேள்விகளை மட்டுமே எழுப்பியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஒன்று எடுத்த சர்வே கூறுகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களை பெற்று வெற்றி பெற்றது. மோடியா இந்த லேடியா என்று கேள்வி எழுப்பியபடி ஜெயலலிதாவின் அதிமுகவில் இருந்து 37 எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொகுதிக்கு நன்மை செய்வதோ அல்லது செய்யாமல் போவது மட்டுமல்ல எம்பிக்களின் பணி, கேள்வி கேட்பது, தனிநபர் மசோதா கொண்டு வருவது, விவாதங்களை முன்னெடுத்து செல்வது இவையும்தான் எம்பிக்களின் பணியாகும்.
ஏடிஆர் சர்வே
ஜனநாயக சீர்திருத்த அமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு ஒன்று லோக்சபாவில் கட்சிகளின் செயல்பாடு குறித்தும், இதுவரை எத்தனை கேள்விகள் கேட்டுள்ளன என்பது குறித்தும் ஆய்வு நடத்தியது. அதில் சிவசேனை கட்சி அதிகம் கேள்விகளை கேட்டு முதலிடத்தில் இருக்கிறது. 18 எம்பிக்களை கொண்ட சிவசேனை கட்சி 565 கேள்விகளை எழுப்பியுள்ளது. அதற்கடுத்த இடத்தில் சரத் பவாரின் என்சிபி கட்சி உள்ளது. 6 எம்பிக்களை கொண்ட அந்த கட்சி இதுவரை 533 கேள்விகளை எழுப்பியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சிகள்
அடுத்தபடியாக 388 கேள்விகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. இதைத் தொடர்ந்து 37 எம்பிக்கள் கொண்ட அதிமுகவோ 369 கேள்விகளை மட்டுமே கேட்டுள்ளது. குறைந்த எம்பிக்களை கொண்டு கட்சிக்கு இருக்கும் மக்கள் நலன் அதிக எம்பிக்களை கொண்டுள்ள அதிமுகவுக்கு இல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. தமிழக எம்பிக்களில் சென்னை சென்ட்ரல் தொகுதி எம்பி எஸ்ஆர் விஜயகுமார் மிகவும் நன்றாக செயல்பட்டு முதல் இடத்தை பிடித்துள்ளார். மொத்தமுள்ள எம்பிக்களின் தரவரிசை பட்டியலில் அவருக்கு 20-ஆவது இடம் கிடைத்துள்ளது. அது போல் விருதுநகர் எம்பி ராதாகிருஷ்ணன் இரண்டாவது இடத்தையும், சென்னை வடக்கு தொகுதி எம்பி வெங்கடேஷ் பாபுவுக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது.
கேள்வி கேட்காதது ஏன்
ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை, மீனவர் பிரச்சினை என்று தமிழகத்தில் அடுக்கடுக்கான பிரச்சினைகள் நிலவி வருகிறது. ஆனால் 37 எம்பிக்கள் இருந்தும் குறைந்தபட்சமே கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்கள் ஆளுக்கு 10 கேள்விகள் என்ற வீதத்தில் 369 கேள்விகளை கேட்டுள்ளனர். ஆனால் 6 எம்பிக்களை கொண்ட பவார் கட்சி 533 கேள்விகளை கேட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது ஆளுக்கு 90 கேள்விகள் என்ற வீதத்தில் கேட்டுள்ளதாகவே தெரிகிறது. இவர்களின் அக்கறை அதிமுக எம்பிக்களுக்கு இல்லாதது ஏன். கைகட்டி வாய்பொத்தி நிற்கவா இவர்களை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தோம் என்று கேட்டுள்ளனர்.
செயல்பாடுகள் ஓகே
மிக சூப்பரான செயல்பாடுகள் பட்டியலில் முதலிடத்தில் மகராஷ்டிரா எம்பிக்களும், இரண்டாவது இடத்தில் கேரள எம்பிக்களும், மூன்றாவது இடத்தில் தமிழக எம்பிக்களும் உள்ளனர். அதிமுகவின் செயல்பாடுகள் கடந்த காலத்தை காட்டிலும் தற்போது எம்பிக்களின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.