இந்தியாவில்தான் “நவீன அடிமைகள்” அதிகம்- குளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் ஆய்வில் தகவல்!
டெல்லி: "நவீன அடிமைகள்" அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 இடத்தில் உள்ளது என்ற தகவல் குளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் 2014 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள நவீன அடிமைகளில் 61 சதவிகிதம் பேர் உள்ள 5 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பும், வாக்ஸ்ப்ரீ பவுண்டேசன் அமைப்பும் இணைந்து 167 நாடுகளில் நடத்திய குளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் 2014 அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அடிமைத் தளையை ஒழிக்கும் நோக்கத்தில் ஆண்டு தோறும் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் 35.8 மில்லியன் மக்கள் நவீனக் கால அடிமைகளாக வாழ்கிறார்கள் என்று அதில் மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் நவீன அடிமைகள் அதிகம் வாழும் பட்டியலில் முதலிடத்தில் மவுரிடானியா உள்ளது.
2 ஆவது இடத்தில் உஸ்பெகிஸ்தான், 3 ஆவது இடத்தில் ஹைதி, 4 ஆவது இடத்தில் கத்தார், 5 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
உலகில் உள்ள நவீன அடிமைகளில் 61 சதவிகிதம் பேர் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகளில் உள்ளனர் என்றும், அந்த 5 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
125 கோடியே 21 லட்சத்து 39 ஆயிரத்து 596 மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 1 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 700 மக்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள்.
இந்தியாவில் கட்டுமானம், விவசாயம், வீட்டு வேலை, ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் மக்கள் நவீன அடிமைகளாக நடத்தப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுமட்டுமின்றி, கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், கட்டாயத் திருமணம் செய்து வைத்தல் போன்ற காரணங்களால் இந்தியாவில் பெண்கள் நவீன அடிமைகளாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன அடிமைகள் கலாச்சாரம் பரவி வருவதால், உலகம் முழுவதும் அடிமை வாழ்க்கையை வாழ்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அடிமைத் தனத்தை ஒழிகக சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்றும், ஆட்களை வலுகட்டாயமாக வேலை வாங்குபவர்களுக்கு தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications