வாஜ்பாய் அஸ்தி தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கப்படுகிறது! இன்றும், நாளையும் சென்னையில் அஞ்சலி
டெல்லி: முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால், கடந்த 16ம் தேதி மறைந்தார். அவர் உடல், 17ம் தேதி முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே, டெல்லியில் இன்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வாஜ்பாய் அஸ்தியை பெற்றுக் கொண்டார். இதன்பிறகு, நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது:
சென்னை கமலாலயத்தில் வாஜ்பாய் அஸ்தி வைக்கப்படும். இதன்பிறகு 6 தலைவர்கள் தலைமையில், 6 வண்டிகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் அஸ்தி கொண்டு செல்லப்படும். 26ம் தேதி 3 கடல், 3 நதிகளில் கலக்கப்படும்.
இதில், மதுரை வைகை, ஸ்ரீரங்கம் காவிரி, பவானி ஆகியவை நதிகள். சென்னை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி கடல்கள்.
எங்கள் கிராமத்திற்கு நீங்கள் வர வேண்டும் என்ற கோரிக்கைகள் வருவதால், பெரும்பாலான பகுதிகளை வாகனங்கள் சென்று சேரும் வகையில் பயண திட்டம் வைத்துள்ளோம்.
தொலைபேசியில் எங்களை தொடர்பு கொண்டு, அஞ்சலி செலுத்த வருவதாக கூறுகிறார்கள். பள்ளிகள், அமைப்புகளும் கோருகிறார்கள். பாஜகவை தாண்டி, வாஜ்பாய் ஒரு தேசிய தலைவர் என்பதால், அனைவருக்கும் அஞ்சலி செலுத்த விருப்பம் உள்ளது.
இன்றும், நாளையும், கமலாலயத்தில் வைக்கப்படும்போது பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்த வசதி உள்ளது. 28ம் தேதி அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் அஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. அனைத்து கட்சி தலைவர்களையும் அதற்கு அழைப்புவிடுக்க உள்ளோம் என்றார் தமிழிசை.
கருணாநிதிக்கு, திரையுலகினர் அஞ்சலி செலுத்தியபோது வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தவில்லை என்ற சர்ச்சை குறித்த கேள்விக்கு, இப்போது அதுபோன்ற சர்ச்சைகளுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என்று தமிழிசை தெரிவித்தார்.